இந்திய ராணுவ முன்னாள் தலைமைத் தளபதி மல்ஹோத்ரா காலமானார்!
குர்கான்: இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஓ.பி.மல்ஹோத்ரா குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.
இந்திய ராணுவத்தின் 13 ஆவது தலைமைத் தளபதியாக 1978 ஆம் ஆண்டு முதல் 1981 ஆம் ஆண்டு வரை பதவி வகித்த மல்ஹோத்ரா, அதன் பிறகு 1984 ஆம் ஆண்டு வரை இந்தோனேசியாவுக்கான இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.
பின்னர் 1990-1991 ஆகிய காலகட்டங்களில் பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டீகரின் நிர்வாகியாகவும் அவர் பதவி வகித்தார். மல்ஹோத்ராவின் சேவைகளைப் பாராட்டி அவருக்கு ஜம்மு பல்கலைக்கழகம் கடந்த 1994 ஆம் ஆண்டு "கெளரவ டாக்டர்" பட்டம் வழங்கி சிறப்பித்தது.
மல்ஹோத்ராவின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். "நாட்டுக்காக மல்ஹோத்ரா ஆற்றிய சேவைகள் எப்போதும் நினைவுகூரப்படும்'' என்று பிரணாப் தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.