கேரளாவில் பயங்கரம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை.. உடல்கள் ஒன்றன் மேல் ஒன்று புதைப்பு!
கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். 62 வயதான இவருக்கு 53 வயதில் சுசீலா என்ற மனைவி இருந்தார்.
இந்த தம்பதிக்கு 20 வயதில் ஆர்ஷா என்ற மகளும் 17 வயதில் ஆதர்ஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 2 நாட்களாக கிருஷ்ணனின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

போலீஸ்க்கு தகவல்
வழக்கம்போல் கிருஷ்ணன் பால் வாங்க வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து கிருஷ்ணனின் வீட்டிற்கு வந்த போலீசார் ஆய்வு செய்தனர்.

வீடு முழுவதும் ரத்தக்கறை
அப்போது வீடு முழுவதும் ரத்தக்கறை படிந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து வீட்டின் தோட்டத்திலும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.

ஈக்கள் மொய்த்தது
அப்போது புதிதாக பள்ளம் ஒன்று தோண்டப்பட்டு மூடப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். அந்த இடத்தில் ஈக்கள் மொய்த்துக்கொண்டிருந்ததால் சந்தேகமடைந்த போலீசார் அந்த இடத்தில் தோண்டி பார்த்தனர்.

ஒன்றன் மேல் ஒன்றாக உடல்கள்
அப்போது 4 பேரின் உடல்களும் ஒன்றன் மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். முதலில் மகன் ஆதர்ஷின் உடலும் அதற்கு கீழ் மகள் ஆர்ஷாவின் உடல், அதற்கு கீழ் மனைவி சுசீலாவின் உடலும் கீழே கிருஷ்ணனின் உடலும் இருந்துள்ளது.

பலத்த காயம்
கிருஷ்ணனின் முகம் முற்றிலும் சேதப்படுத்தப்பட்டிருந்தது. சுசீலாவின் மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. அதேபோல் ஆர்ஷாவின் பின்பக்கமும் பலத்தகாயம் ஏற்பட்டிருந்தது. ஆதர்ஷின் உடலிலும் பலத்த காயங்கள் இருந்தன.

உடலின் அருகே சுத்தியல்
உடலின் அருகே கத்தி, சுத்தியல், இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களும் கண்டெடுக்கப்பட்டன. கொலை நடந்த விதம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை பார்க்கையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சூனியம் வைப்பது தொழில்
கிருஷ்ணன் மாய மந்திரம், சூனியம் வைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதுதொடர்பாக அவர் மீது போலீஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அக்கம்பக்கத்தினரிடம் விலகல்
கிருஷ்ணனை காண இரவு நேரங்களில் பலர் அவரது வீட்டிற்கு கார்களில் வருவார்கள் என்று அவரது சகோதரர் தெரிவித்துள்ளார். மேலும் கிருஷ்ணனின் குடும்பத்தினர் அக்கம்பக்கத்தினரிடம் அதிகம் பேசாமல் விலகியே இருந்துள்ளனர்.

4 நாட்களுக்கு முன்பு கொலை
பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது.
கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து விசாரிக்க தொடுபுழா துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.











Click it and Unblock the Notifications