ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி
Recommended Video
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் அதிகாலை 3.45 மணிக்கு இந்திய விமானப் படை நடத்தியது.

சுமார் 21 நிமிடம் நடந்த தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது, ஹிஸ்புல் முகாதீன் தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டது. இதில் முக்கியமாக ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டு அறை தகர்க்கப்பட்டது.மேலும், 200 க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. உலக நாடுகளின் அழுத்தத்தை தொடர்ந்து, பாகிஸ்தான் அடக்கி வாசித்தது.
இந்தநிலையில், ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள லஸ்ஸிபோரா பகுதியில், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர் வனப்பகுதிக்குள் மறைந்து இருந்த தீவிரவாதிகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். பின்னர் தீவிரவாதிகளும் பதில் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். தீவிரவாதிகளிடம் இருந்து 3 ஏகே - 47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பாதுகாப்பு படையினர் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அங்கு தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்பதால், சம்பவ இடத்திற்கு கூடுதல் பாதுகாப்பு படையினர் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் இரு தரப்பினர் இடையே மோதல் நடந்து வருகிறது. நாட்டையே உலுக்கிய தீவிரவாத தாக்குதல் நிகழ்ந்த பகுதியான புல்வாமாவில் மீண்டும் இந்திய ராணுவத்திற்கும், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிகளுக்கும் நடந்திருக்கும் இந்த தாக்குதல் அங்குள்ள மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications