காரை வழிமறித்து துப்பாக்கி முனையில் 4 பெண்கள் பலாத்காரம்: தடுக்க முயன்றவர் சுட்டுக்கொலை!
உத்தரப்பிரதேசத்தில் காரை வழிமறித்து 4 பெண்களை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டா: உத்தரப்பிரதேசத்தில் காரை வழிமறித்து 4 பெண்களை மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தடுக்க முயன்ற ஒரு நபரையும் அவர்கள் சுட்டுக்கொன்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா ஜேவர் என்ற இடத்திலிருந்து 4 பெண்கள் உள்பட 8 பேர் ஒருகாரில் புலந்த்சாகர் நகருக்கு சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 1.30 மணியளவில் ஜேவர் பகுதியில் உள்ள சாபோடேஜ் என்ற கிராமம் வழியாக அவர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது சில மர்ம நபர்கள் கையில் கத்திய, இரும்புக்கம்பி, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் காரை வழிமறித்தனர்.
4 பெண்கள் பலாத்காரம்
பின்னர் காரில் இருந்தவர்களை மிரட்டும் வகையில் துப்பாகியால் சுட்டுள்ளனர், இதைத்தொடர்ந்து அந்த காரில் இருந்த 4 பெண்களையும் வலுக்கட்டாயமாக வெளியில் இழுத்த அவர்கள், 4 பேரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
தடுக்க முயன்றவர் கொலை
இதனை தடுக்க முயன்ற ஒருவரையும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. பின்னர் காரில் வந்தவர்களிடம் இருந்த நகைகள் மற்றும் பணத்தையும் அந்தக் கும்பல் பறித்துச்சென்றது.
பெண்களுக்கு மருத்துவ சோதனை
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கபட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர்.
ஏற்கனவே நடந்த சம்பவம்
காரில் சென்ற பெண்களை துப்பாக்கி முனையில் கடத்தி பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல் புலந்த்சாகர் பகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு காரில் சென்ற கணவரை சுட்டுக்கொன்று மனைவியை 6 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்தது குறிப்பிடத்தக்கது.