பருவநிலை மாற்றங்களைக் கட்டுப்படுத்த... இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்
டெல்லி: பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான அறிவிப்பை நேற்று டெல்லியில் வெளியிட்டார் பிரான்ஸ் வெளியுறவுத் துறை அமைச்சர் லாரெண்ட் ஃபேபியஸ். அப்போது அவர் கூறியதாவது :-
பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த ஒரு பில்லியன் யூரோக்களும் (இந்திய மதிப்பில் சுமார் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய்) இன்னும் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவுக்கு வழங்கப்படும்.
பருவநிலை மாற்றம் தொடர்பான விவகாரத்தில் இந்தியாவுடன் நெருக்கமாக இணைந்து செயல்படவே பிரான்ஸ் விரும்புகிறது. வரும் 2015-ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறவுள்ள பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு வெற்றிகரமாக அமைய இந்திய பிரதமரின் ஆதரவை நாங்கள் எதிர்பார்க்கிறோம்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.