மும்பையில் பயங்கர கடல் சீற்றம்: மக்கள் வெளியேற எச்சரிக்கை!
மும்பை: மும்பையில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோர பகுதியில் வசிக்கும் மக்களை வெளியேற மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயல் சின்னமாக மாறியது. இந்த புயலுக்கு ‘நானாவுக்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை மாலை 5.30 மணி வரையிலான நிலவரப்படி, மும்பையில் இருந்து மேற்கு, தென்மேற்கு திசையில் 940 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.
கடல் பரப்பில் மணிக்கு 15 கி.மீ. வேகத்தில், மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் நானாவுக் புயல், அடுத்த 24 மணி நேரத்தில் வலுவிழக்கலாம் அல்லது மேலும் தீவிரமடைந்து சில நாள்களில் ஓமன் நாட்டு கடற்கரையில் கரையைக் கடக்கலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடல்சீற்றம்
இந்த புயலின் தாக்கத்தால் கடந்த 2 நாட்களாக மும்பையில் கடல் சீற்றம் காணப்படுகிறது. நேற்று கடல் சீற்றம் விஸ்வரூபம் எடுத்து மக்களை மிரட்டியது.
கனமழை
அதிகாலை 5.30 மணியளவில் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை சுமார் 20 நிமிடத்திற்கு மேல் நீடித்தது. ஆனால், பகல் நேரத்தில் வானம் வெறிச்சோடி காணப்பட்டது. வெயிலின் தாக்கம் வழக்கம் போல் இருந்தது.
ரட்சத அலைகள்
இந்த நிலையில், பகல் 11.30 மணியளவில் ராட்சத அலைகள் கடலோர பகுதிகளை தாக்கின. ஆக்ரோஷத்துடன் எழுந்த அலைகளால் கடல் நீர் தடுப்புச்சுவர்களை தாண்டி வந்தன. கடற்பரப்பில் பலத்த காற்றும் வீசியது. தாதர் சிவாஜி பார்க், ஒர்லி, மெரின் டிரைவ், ஹஜ் அலி உள்ளிட்ட பகுதிகளில் கடல் அலைகள் 15 அடி முதல் 20 அடி உயரத்திற்கு எழும்பின.
சாலைகளில் கடல்நீர்
ஆர்ப்பரித்து வந்து அலைகள் தாக்கியதில் நகரின் பல்வேறு பகுதிகளிலும் கடல் நீர் புகுந்தது. நரிமன் பாயிண்ட், கொலபா, மெரின் டிரைவ் ஒர்லி, தாதர், சிவாஜி பார்க் ஆகிய பகுதிகளில் கடல் நீர் நகருக்குள் புகுந்தது. ஜூகு, மார்வே, கோராய், பாந்திரா உள்பட பல இடங்களில் பேரலைகள் எழுந்தபடி இருந்தன.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
சுற்றுலா பகுதியான மும்பை கேட்வே ஆப் இந்தியா கடற்கரையிலும் கடல் அலைகள் எழும்பி காணப்பட்டது. இதனால், கடலின் அருகே செல்வதற்கு சுற்றுலாவாசிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இங்கு கடல் அலைகள் சுமார் 14 அடி உயரத்திற்கு எழுந்ததால், கடற்கரை ஓரத்தில் பொதுமக்கள் நடமாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை.
வெளியேற உத்தரவு
கட்டிடங்கள் தண்ணீரால் சூழப்பட்டதால், மக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கடற்கரைக்கு யாரும் போக வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டனர்.
இன்றும் கடல், சீற்றத்துடன் காணப்படுவதால் மிகப்பெரிய அலைகள் தாக்கலாம் என்பதால் கடலோர பகுதியில் இருந்து மக்களை வெளியே மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.