மீண்டும் வருகிறது ப்ரீடம் 251.. விலைகுறைந்த ஸ்மார்ட்போன்.. இந்த முறையும் ஏமாற்றுவார்களா?
சென்ற ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மீண்டும் இந்த ஆண்டு புக்கிங்கை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லி: சென்ற ஆண்டு பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன் மீண்டும் இந்த ஆண்டு புக்கிங்கை தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டு இருக்கும் வழக்கில் நிறைய மாற்றங்கள் வந்துள்ள நிலையில் தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.
மேலும் இதற்காக அந்த நிறுவனம் அரசாங்கத்தின் உதவியை நாடி இருக்கிறது. சென்ற வருடம் இந்தியா முழுக்க இந்த நிறுவனம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் சந்தைக்கு வர துடிக்கும் இந்த நிறுவனம் நிறைய வித்தியாசமான திட்டங்களை மனதில் வைத்து இருப்பதாக கூறியுள்ளது.
ப்ரீடம் 251 ஸ்மார்ட்போன்
சென்ற ஆண்டு டிசம்பரில் ப்ரீடம் 251 என்ற மொபைல் போன் குறித்த செய்திகள் வந்தது. 251 ரூபாய்க்கு ஸ்மார்போன் வழங்க போவதாக ''ரிங்கிங் பெல்ஸ்'' என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டு, இந்த ப்ரீடம் 251 போனின் முன்பதிவை தொடங்கியது. இதையடுத்து அந்த நிறுவனத்தின் சர்வர் செயல்படாமல் போகும் அளவுக்கு பலரும் ப்ரீடம் 251 போனை புக் செய்தனர். ஒரே நாளில் ப்ரீடம் 251 இந்தியா முழுக்க வைரல் ஆனது.
எல்லாம் பொய்
ஆனால் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தபடி யாருக்கும் ப்ரீடம் 251 போன் டெலிவரி செய்யப்படவில்லை. இதையடுத்து பலரும் அந்த நிறுவனத்திற்கு எதிராக புகார் அளித்தனர். இதையடுத்து அந்த நிறுவனத்தின் தலைவரும், இன்னொரு முக்கிய அதிகாரி ஒருவரும் கைது செய்யப்பட்டனர். நிறுவன தலைவரான மோஹித் கோயல் இதனால் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கில் திருப்பம்
இந்த நிலையில் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் புதிய வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. அதில் விகாஸ் சர்மா, ஜீத்து என்ற இரண்டு டீலர்கள் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறினார். அதன்படி அவர்கள்தான் அந்த முன்பதிவு பணம் மொத்தத்தையும் எடுத்துவிட்டு மறைந்துவிட்டதாக கூறி இருந்தார். அவர்கள் சரியாக தனக்கு மொபைல் போன்களை டெலிவரி செய்யாத காரணத்தால் தன்னால் மக்களுக்கு போன்களை டெலிவரி செய்யமுடிவில்லை என்று கூறினார். தற்போது இந்த இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மீண்டும் வருகிறது ப்ரீடம் 251
தற்போது அந்த நிறுவன தலைவர் மோஹித் கோயல் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் அவர் மக்களிடம் மீண்டும் ஒரு வாய்ப்பு கேட்டு இருக்கிறார். அதேபோல் மத்திய அரசிடமும் ஒரு வாய்ப்பு கேட்டுள்ளார். அவரது மாடலை பார்த்து பலர் விலை குறைந்த போன்களை தருவதாகவும் தான் அதை விட விலை குறைவான போன் தர முடியும் என்றும் கூறியுள்ளார். எல்லாம் சரியாக நடந்தால் விரைவில் முன்பதிவு தொடங்கும் என்று நம்பிக்கையாக பேசியுள்ளார்.