மேகிக்கு நற்சான்றிதழ் வழங்கவில்லை.. சோதனை முடிவு தவறு என உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பு விளக்கம்
டெல்லி : மேகி நூடுல்ஸ் உண்பதற்கு பாதுகாப்பானதுதான் என்று எந்த நற்சான்றிதழும் மேகி நூடுல்ஸுக்கு வழங்கவில்லை என்று உணவு பாதுகாப்பு தர நிர்ணய அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகளில் அளவுக்கு அதிகமாக காரீயமும், ரசாயன உப்பான மோனோ சோடியம் குளுட்டாமேட் உள்ளிட்ட ரசாயன பொருள்கள் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக சேர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்ததையடுத்து மேகி நூடுல்ஸ் இந்தியா முழுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று, கோவா மாநில உணவு பாதுகாப்பு தர நிர்ணயம் மற்றும் மைசூர் ஆய்வகமும் மேகி நூடுஸ்ல் பாதுகாப்பானது என்று தெரிவித்தாக தகவல் வெளியானது.
இது தொடர்பாக உணவு பாதுபாப்பு தர நிர்ணயம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், கோவா மற்றும் மைசூரில் உள்ள உணவு மற்றும் மருந்து நிர்வாகம், மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் மேகி நூடுல்ஸ் பாதுகாப்பானது என்று அறிக்கை வெளியிட்டுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
சோதனை தவறாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த சோதனை முடிவு அபத்தமானவை என்றும் உணவு பாதுபாப்பு தர நிர்ணய அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும், இங்கிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் மேகி நூடுஸ்க்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், சோதனை சான்றுகளையும் நெஸ்ட்லே நிறுவனம் இன்னும் பகிர்ந்து கொள்ளவில்லை என்றும் உணவு பாதுபாப்பு தர நிர்ணயம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications