2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நவம்பர் 10 முதல் இறுதி வாதம்: சிபிஐ சிறப்பு நீதிமன்றம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டு வழக்கின் இறுதி வாதம் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் மத்திய அரசுக்கு ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை துறை அதிகாரி தனது விசாரணை அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

நாட்டையே உலுக்கிய 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், தொலைத்தொடர்புத்துறையின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, திமுக எம்.பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத்குமார், தொழிலதிபர்கள் ஷாகித் உஸ்மான் பல்வா, வினோத் கோயங்கா என மொத்தம் 14 பேர் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். இதுதவிர ரிலையன்ஸ் உட்பட 3 தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.
அலைவரிசை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில், டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் முன்னாள் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழியும் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவர்கள் இருவரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த வழக்கில் சிபிஐ தரப்பிலான 153 சாட்சிகளிடம் நடத்தப்பட்டு வந்த சாட்சியப் பதிவு கடந்த நவம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்தது.
அதில், ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் அனில் அம்பானி, அவரது மனைவி டினா அம்பானி, பெரு நிறுவனங்களின் தரகர் நீரா ராடியா, அட்டார்னி ஜெனரல் ஜி.இ. வாஹனவதி உள்ளிட்டோர் பங்கேற்று அளித்த சாட்சியங்கள், 4,400 பக்கங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
குற்றம்சாட்டப்பட்டுள்ள ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் இயக்குநர் சரத்குமார் உள்ளிட்ட 14 பேரின் சாட்சியங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2ஜி வழக்கில் நவம்பர் 10 முதல் இறுதிவாதம் தொடங்கும் என டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான வழக்கில் இறுதிவாதம் நடைபெற உள்ளது.












Click it and Unblock the Notifications