காந்தி தொடர்ந்து சிரிப்பார்...ரூபாய் நோட்டுக்களில்!
டெல்லி: தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தை ரூபாய் நோட்டுக்களிலிருந்து அகற்றும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது.
ரூபாய் நோட்டுக்களில் மகாத்மா காந்தியின் படம் மட்டுமே இடம் பெற்றுள்ளது. தேசத் தலைவர்களில் காந்திக்கு மட்டுமே இந்த மரியாதையையும், கெளரவத்தையும் அரசு கொடுத்துள்ளது. இந்த நிலையில் காந்தியின் படத்தை அகற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது நேற்று ராஜ்யசபாவிலும் எதிரொலித்தது. இந்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய நிதித்துறை இணையமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், எந்த மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட வேண்டும் என்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் கலந்தாலோசித்து மத்திய அரசு முடிவெடுத்து வருகிறது. அதேபோல கள்ள நோட்டுகள் தயாரிக்க முடியாத அளவுக்கு ரூபாய் நோட்டுகளைத் தனித்துவத்துடன் வடிவமைப்பது குறித்தும் ரிசர்வ் வங்கியுடன் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
சட்ட மேதை டாக்டர் அம்பேத்கரின் 125வது பிறந்த தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அவரது உருவப்படம் பொறித்த 10 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு வெளியிட்டுள்ளார். ஆனால், அவரது படத்துடன் ரூபாய் நோட்டு வெளியிடும் திட்டமில்லை. 10 ரூபாய் நாணயத்துக்கு தேவை அதிகம் உள்ளது. இனி புதிதாக அதிக அளவில் அம்பேத்கர் படம் பொறித்த நாணயங்கள் வெளியிடப்படும்.
காங்கிரஸ் தலைமையிலான கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்றுவது அல்லது வேறு தலைவர்களின் படங்களைச் சேர்ப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்றும் வேறு தலைவர்களின் படத்தை சேர்க்க வேண்டாம் என்று அக்குழு பரிந்துரைத்தது. அதன்படியே ரூபாய் நோட்டுகளில் காந்தி படத்தை மாற்ற வேண்டாம் என்று மத்திய அரசு முடிவெடுத்துள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications