உ.பி.யில் பயங்கரம்... பலாத்காரம் செய்யப்பட்ட பெண் போலீஸ் நிலையம் முன்பு தீக்குளித்து தற்கொலை
லக்னோ: புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு, உத்திரப்பிரதேசத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பெண், காவல் நிலையம் முன்னதாக தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹாத்ராஸ் மாவட்டத்தின் சிகாந்த்ரா பகுதியில் மணமான பெண் ஒருவர், சமீபத்தில் கும்பல் ஒன்றால் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் அப்பெண். ஆனால், புகாரை வாங்க போலீசார் மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால், மனமுடைந்த அப்பெண், காவல் நிலையம் முன்பாக தீக்குளித்தார். 90 சதவீத தீக்காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட அப்பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
பலாத்காரம் தொடர்பான புகாரை வாங்க மறுத்து இளம்பெண் தற்கொலைக்கு காரணமாக இருந்ததாக போலீசாருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், போலீஸ் நிலையம் மீது கற்களை வீசி தாக்கினர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.