திஹார் சிறையில் இருந்து பணம் கேட்டு போன் மூலம் மிரட்டல் விடுத்த ரவுடி
டெல்லி: டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவுடி ஒருவன் தொழில் அதிபருக்கு போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் கேட்டு மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 20 வழக்கு விசாரணைகளை சந்தித்து வருபவன் ரவுடி நவீன் பாலி. கடந்த 2 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள திஹார் சிறையில் உள்ளான். இந்நிலையில் அவன் சிறையில் செல்போன் பயன்படுத்தியது தெரிய வந்துள்ளது. அவன் அந்த செல்போன் மூலம் லலித் மாதுர் என்ற தொழில் அதிபரை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளான்.

மேலும் அனூப் சிங் என்பவருக்கு போன் செய்து பிரகலாத்பூர் கிராமத்தில் அவருக்கு சொந்தமான கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை காலி செய்துவிட்டு அதற்குரிய பத்திரங்களை தனது உதவியாளர் விஷாலிடம் அளிக்குமாறு பாலி மிரட்டியுள்ளான்.
அவன் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை செல்போன் பயன்படுத்தி வந்துள்ளான். இந்நிலையில் தான் அவன் போலீசாரிடம் சிக்கினான். மேலும் சிறைக்கு வெளியே இருந்து அவனுக்கு உதவிய விஷால் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவ்வளவு பாதுகாப்பு உள்ள திஹார் சிறையில் 35 முதல் 40 ஜாம்மர்கள் உள்ளன. அப்படி இருந்தும் பாலி செல்போன் பயன்படுத்தி பணம் கேட்டு மிரட்டியுள்ளான். அவன் டெல்லி போலீசாரால் தேடப்படும் பிரபல ரவுடிகளான நீரஜ் பவானா மற்றும் அமித் புரா ஆகியோருக்கு பணம் திரட்டியுள்ளான். பவானா பரோலில் வெளியே சென்றவன் தலைமறைவாகிவிட்டான். புரா போலீஸ்காரர் ஒருவரிடம் இருந்து ஏ.கே.- 47 துப்பாக்கியை பறித்துக் கொண்டு ஓடிவிட்டான். இருவரும் நேபாளத்திற்கு தப்பியோட திட்டமிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications