கவுரி லங்கேஷ் கொலையில் முக்கிய துப்பு.. குற்றவாளிகளின் வரைபடங்களை வெளியிட்ட காவல்துறை
பெங்களூர்: பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என சந்தேகப்படும் இருவரின் உருவப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பெண் பத்திரிகையாளரும், முற்போக்கு போராளியுமான, கவுரி லங்கேஷ் பெங்களூர் ராஜராஜேஸ்வரி நகரில் அவரின் வீட்டுக்கு வெளியே வைத்து கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இக்கொலை குறித்து விசாரிக்க கர்நாடக உளவுத்துறை ஐஜிபி பி.கே.சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.
படங்கள் வெளியீடு
கொலை சம்பவம் நடந்து ஒரு மாதம் கடந்துள்ள நிலையில், இன்று முதல் முறையாக நிருபர்களை சந்தித்தார் பி.கே.சிங். அப்போது குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் இருவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டன. மொத்தம் 3 வகையான வரைபடங்கள் வெளியிடப்பட்டன. குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாக சிங் தெரிவித்தார்.
ஒரு வாரமாக நோட்டம்
கொலையாளிகள் சம்பவ இடத்தில் ஒரு வாரமாக முகாமிட்டு கவுரி லங்கேஷை நோட்டமிட்டுள்ளதாகவும், அவர்கள் பயன்படுத்திய பல்சர் பைக் மற்றும் அது சார்ந்த விஷயங்களை அறிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டன.
|
ஓவியர்கள் வரைந்த படம்
கொலையாளிகளை கண்ணால் கண்ட சாட்சியங்கள் கூறியதன் அடிப்படையில் இரு ஓவியர்களை கொண்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டதாகவும், இரு ஓவியர்களுமே ஓரளவுக்கு ஒரே மாதிரியான படங்களை வெளியிட்டுள்ளதால் குற்றவாளிகள் இதைப்போலத்தான் இருப்பார்கள் என்பது உறுதியாகியுள்ளதாகவும், பொதுமக்கள், இவர்களை பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் சிங் கேட்டுக்கொண்டார்.
மூன்று கோணங்களில் விசாரணை
கொலையாளிகள் 25 - 30 வயதுள்ளோர் என்றும், 7.6 எம்எம் வகை பிஸ்டலை வைத்து சுட்டதாகவும், கல்புர்கியை கொலை செய்தவர்களும் இவர்களும் ஒரே நபர்கள் என்பதற்கான ஆதாரங்கள் வெளியாகவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தனிப்பட்ட பகை, தொழில் பகை மற்றும் போராட்டக்காரர் என்ற வகையில் உருவான பகை ஆகிய மூன்று கோணங்களில் விசாரணை நடப்பதாக அவர் தெரிவித்தார்.