ஒரு மாதமாக கவுரி லங்கேஷை பின்தொடர்ந்த கொலையாளிகள்!
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய கொலையாளிகள் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்துள்ளனர்.
Recommended Video

பெங்களூர்: பெங்களூரைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷை கொலை செய்ய கொலையாளிகள் அவரை ஒரு மாதமாக பின்தொடர்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இவர் இடது சாரி சிந்தனையாளர். ஆர்எஸ்எஸ் இயக்கத்தை மிகக் கடுமையாக எதிர்த்தவரும் கூட.
பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாலை வெளியே சென்றுவிட்டு அவரது வீட்டின் கதவை திறந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

தனிப்படை
இந்நிலையில் அவரது கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளிகள் அவரை கடந்த 15 நாள்களாக பின்தொடர்ந்து வந்திருக்கக் கூடும் என்று முதல் கட்ட விசாரணை கூறுகிறது. இதுகுறித்து ஒன்இந்தியாவுக்கு புலனாய்வு துறை அதிகாரிகள் கூறுகையில், அவரை யாரோ பின்தொடர்வதை தெரிந்த பிறகுதான் அவரது வீட்டில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டன.

அலுவலகத்தில் இருந்து...
அவரை மர்மநபர்கள் பெங்களூரில் காந்தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்து ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீடு வரை அவரை மர்மநபர்கள் பின்தொடர்ந்துள்ளனர். இதுகுறித்து தனது தாயிடம் கவுரி தெரிவித்துள்ளார். எனினும் போலீஸாரிடம் சொல்லவில்லை. இந்த சம்பவத்துக்கு பிறகு, தனது வீட்டில் சிசிடிவி கேமராவை அவர் நிறுவியுள்ளார்.

மாநில உள்துறை அமைச்சர்
இந்நிலையில் அவர் மாநிலத்தின் உள்துறை அமைச்சரை கடந்த திங்கள்கிழமை சந்திக்க திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் சந்திக்கவில்லை. ஒரு வேளை அவரை சந்தித்திருந்தால் தன்னை பின்தொடரும் மர்மநபர்கள் குறித்து தகவல் தெரிவித்திருப்பார்.அவரது வீட்டில் எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் மிகவும் சிறியதாக உள்ளன. அவற்றை பெரிதாக்கித்தான் ஆய்வு செய்ய வேண்டும். எனவே இது திட்டமிட்ட கொலைதான் என்று தெரிவித்தனர்.

வழக்கமானது அல்ல
கவுரியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவரது உடல் வழக்கமான துப்பாக்கிளால் துளைக்கப்பட்டது அல்ல என்று தெரிவித்துள்ளது. கவுரியின் உடலை துளைத்த துப்பாக்கி 7.65 எம்எம் கொண்டது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் கவுரியின் வீட்டு கேட்டுக்கும் அவரது வீட்டுக்கும் இடையே நடந்துள்ளது. சுமார் 10 அடி தூரத்தில் இருந்து சுடப்பட்டுள்ளார். கவுரியின் செல்போனையும், அவரது வீட்டை சுற்றியுள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications