அமேதிக்கு வந்த களங்கம்.. பலாத்கார வழக்கில் சிக்கிய காயத்ரி பிரஜாபதி வெற்றிமுகத்தில்!
உத்தரப் பிரதேச சட்டசபை தேர்தலில் பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி அமேதி தொகுதியில் முன்னிலை வகிப்பது அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
லக்னோ: உத்தரபிரதேசத்தில் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த காயத்ரி பிரஜாபதி, அவர் போட்டியிட்ட அமேதி தொகுதியில் முன்னிலை வகிக்கிறார்.
காயத்ரி பிரஜாபதி, அகிலேஷ் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவி வகித்தார். இவர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதியப்பட்டுள்ளது. இவர், தன்னுடைய அமைச்சர் பதவியை பயன்படுத்திக்கொண்டு, பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது. கடந்த முறை தேர்தலில் போட்டியிடும்போது வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பதாகவும் தனக்கு சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், தற்போது பல கோடி ரூபாய் சொத்துக்களுக்கு அதிபதியாக உள்ளார். இந்நிலையில் அவர் மீது பாலியல் பலாத்கார வழக்கும் பதியப்பட்டுள்ளது. அவர் ஒரு பெண்ணைக் கூட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினார் என்றும், அந்தப் பெண்ணின் சிறுவயது மகளிடம் அத்துமீறி நடந்துகொண்டார் எனவும் அவர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.
காவல்துறை அவரைத் தேடிவந்த போது, அவர் உத்திரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் வீட்டில் ஒளிந்திருந்தார் எனவும் கூறப்பட்டது. அவர் வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லக் கூடாது என்பதற்காக, கடந்த ஒருவாரத்துக்கு முன்பு விமான நிலையங்களில் கடும் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், ஊழல் குற்றச்சாட்டுகளிலும், பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என தேடப்பட்டு வரும் நிலையிலும் காயத்ரி பிரஜாபதி முன்னிலை வகிக்கிறார். உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி தோல்வியைத் தழுவுகின்ற போதும், குற்றவாளி என குற்றம்சாட்டபப்பட்ட காயத்ரி பிரஜாபதி அமேதித் தொகுதியில் முன்னிலை வகிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி லோக்சபா தொகுதியில்தான் ராகுல் காந்தி உறுப்பினராக உள்ளார். இந்த்த தொகுதியில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளராக பிரஜாபதி போட்டியிட்டார் என்பது ரொம்பக் கேவலமானது.