ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பு வழக்கு: குற்றவாளி பெய்க் தூக்கு தண்டனை ரத்து- ஆயுளாக குறைப்பு!
மும்பை: புனே ஜெர்மன் பேக்கரி குண்டுவெடிப்பு சம்பவத்தில் தீவிரவாதி ஹிமாயத் பெய்க்கின் தூக்கு தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்துள்ளது.
மகராஷ்டிரா மாநிலம் புனே நகரில் 2010ஆம் ஆண்டு வெளிநாட்டவர் அதிகம் கூடும் ஜெர்மன் பேக்கரியில் இரவு 7 மணிக்கு பயங்கர குண்டு வெடித்தது. இதில் 17 பேர் பலியாகினர். 64 பேர் படுகாயமடைந்தனர்.
இந்த வழக்கில் ஹிமாயத் பெய்க் என்ற தீவிரவாதி பிடிபட்டான். மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி அபுஜிண்டால்தான் கொழும்பு புறநகர் பகுதியில் வைத்து ஹிமாயத்துக்கு பயிற்சி கொடுத்திருக்கிறான் என்றெல்லாம் நீதிமன்றத்தில் போலீசார் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் தலைவன் யாசின் பட்கல் கைது செய்யப்பட்டான். இதனைத் தொடர்ந்து ஹிமாயத் பெய்க் அப்பாவி என ஒரு தரப்பினர் வாதிடத் தொடங்கினர்.
ஆனால் ஹிமாயத் பெய்க் வீட்டில் இருந்து ஆர்டிஎக்ஸ் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பெய்க்கின் வழக்கறிஞரோ, போலீசார் வெடிகுண்டு வெடித்த இடத்தில் இருந்த துகள்களைத்தான் வீட்டில் கண்டெடுத்த ஆர்டிஎக்ஸ் எனக் கூறியதாக சுட்டிக்காட்டினர். மேலும் புனே குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது பெய்க், அவுரங்கபாத்தில் இருந்ததாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெய்க்குக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தண்டனையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பெய்க் மேல்முறையீடு செய்திருந்தார்.
இம்மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் நரேஷ் பாட்டீல், எஸ்பி சுக்ரே ஆகியோர் பெய்க்கின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவிட்டனர்.