எஜமானனுக்காக புலியிடம் சண்டையிட்ட ஜெர்மன் ஷெப்பர்ட்.. ஓனரை காப்பாற்றி உயிரைவிட்ட சோகம்
போபால்: மத்திய பிரதேசத்தில் ஓனரை தாக்க வந்த புலியிடம் சண்டையிட்டு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் விரட்டியது. இதன்மூலம் தனது எஜமானனை காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட், புலி தாக்கியதில் காயமடைந்து அடுத்த சிலமணிநேரங்களில் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நம்மில் பலரும் வீட்டில் செல்லப்பிராணிகளை வளர்ப்பது உண்டு. மாடு, ஆடு உள்ளிட்ட கால்நடைகளை போல் நாய், பூனை உள்ளிட்டவற்றின் மீதும் அதிக பாசத்தை காட்டி வளர்ப்போம். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தின் ஒரு உறுப்பினராகவே அந்த செல்லப்பிராணிகள் மாறிவிடும்.

இப்படி அதிக அன்பை கொட்டி வளர்ப்பதால் தானோ என்னவோ, அந்த செல்லப்பிராணிகளும் வீட்டில் உள்ளவர்கள் மீது அதிகமான பிரியத்துடன் நடந்து கொள்ளும். உதாரணமாக, வீட்டில் உள்ளவர்கள் எதிர்பாராமல் மரணிக்கும்போது கண்ணீர் வடிப்பது, சாப்பிடாமல் இருப்பது உள்ளிட்ட சம்பவங்களை நாம் பார்த்து இருப்போம்.
அதேபோல் வீட்டுக்குள் நுழையும் திருடனை விரட்டுவது மட்டுமின்றி விஷ ஜந்துவான பாம்புடன் கூட சண்டையிடும் சம்பவங்களை பற்றி நாம் கேள்விப்பட்டு இருப்போம். இப்படி தங்களின் எஜமானர்களுக்கு நன்றி விசுவாசத்தை செல்லப்பிராணிகள் காட்டி வருகின்றன. இப்போது அப்படியொரு சம்பவம் தான் நடந்துள்ளது. தாக்க வந்த புலியிடம் சண்டையிட்டு எஜமானரை காப்பாற்றிய ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் பரிதாபமாக இறந்துள்ளது.
அதாவது மத்திய பிரதேச மாநிலம் சாத்னா மாவட்டத்தில் வனப்பகுதியையொட்டி பந்தவ்கார்க் எனும் புலிகள் சரணாலயம் உள்ளது. இதன் அருகே சிவம் பத்கையா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை வளர்த்து வந்தார். இந்த நாய்க்கும், சிவம் பத்கையாவுக்கும் இடையே நல்ல உறவு என்பது இருந்தது. சொந்த மகனை போல் ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை அவர் வளர்த்து வந்தார்.
இந்நிலையில் தான் சிவம் பத்கையா ஜெர்மன் ஷெப்பர்ட் நாயுடன் வீட்டுக்கு வெளியே வந்தார். நாயை அழைத்து கொண்டு வீட்டு அருகே நடந்து சென்றார். இந்த சமயத்தில் வனப்பகுதியில் இருந்து புலி ஒன்று வந்தது. அந்த புலி சிவம் பத்கையாவை பார்த்தபடி நின்றது. இதனால் அவர் செய்வதறியாது திகைத்து நின்றார். அடுத்த சில வினாடிகளில் புலி, சிவம் பத்கையாவை நோக்கி தாக்க பாய்ந்தது.
இந்த வேளையில் புலியை பார்த்த ஜெர்மன் ஷெப்பர்ட் குரைத்தது. அதோடு புலியை நோக்கி சென்று சண்டையிட்டது. இதை சாதகமாக பயன்படுத்தி சிவம் பத்கையா அங்கிருந்து எஸ்கேப் ஆனார். சிறிது தூரம் சென்று அவர் திரும்பி பார்த்தபோது புலியிடம், ஜெர்மன் ஷெப்பர்ட் சண்டையிட்டது. ஒரு கட்டத்தில் புலி, ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விட்டுவிட்டு அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது.
ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் சிவம் பத்கையாவின் வீட்டுக்கு வந்தது. அப்போது நாயின் தாடைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்தது. புலி கடித்ததால் அந்த காயம் ஏற்பட்டு இருந்தது. உடனடியாக கால்நடை மருத்துவமனைக்கு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய் கொண்டு செல்லப்பட்டது. அங்கு டாக்டர் சிகிச்சை அளித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி ஜெர்மன் ஷெப்பர்ட் இறந்தது. புலியிடம் சண்டையிட்டு எஜமானரை காக்க உயிரை விட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். அதன்பிறகு இறுதி சடங்குகளுடன் நாய் புதைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications