தலைநகரில் தொடரும் அவலம்... ஓடும் காரில் இளம்பெண் பலாத்காரம்: 3 பேர் கைது
டெல்லி: டெல்லியில் ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட புகாரில் குற்றவாளிகள் மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு மருத்துவமாணவி ஒருவர் ஓடும் பேருந்தில் பலாத்காரம் செய்யப் பட்டு படுகொலை செய்யப் பட்டார். நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை உண்டாக்கியது இந்த சம்பவம். இதன் மூலம் இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற பிம்பம் சர்வதேச அளவில் உண்டானது.
பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் அரசு சட்டங்களைக் கடுமையாக்கியது. ஆனபோதும், பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்து கொண்டு தான் உள்ளன.
இந்நிலையில், தற்போது ஓடும் காரில் இளம்பெண் ஒருவர் மூன்று பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டுள்ளார்.
நேற்றிரவு 25 வயது இளம்பெண் ஒருவரை காரில் கடத்திய மூன்று பேர் கொண்ட கும்பலொன்று, அவரை ஓடும் காரிலேயே பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. பின்னர் அவர்களிடமிருந்து தப்பிய இளம்பெண், இது தொடர்பாக தென் டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார், குற்றவாளிகள் மூவரும் டெல்லியின் நங்கல் தேவட் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனக் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப் பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் தப்பியோடிய மூவரையும் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
கைதானவர்களின் பெயர்கள் முறையே ஜிதேந்தர், ஜெய் பகவான் மற்றும் அஜய் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், அவர்கள் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்யப் பட்டு விசாரணை நடத்தப் பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யூடியூப் சேனல் நடத்திய ரகசிய கேமரா நிகழ்ச்சி ஒன்றில், ஓடும் காரில் இளம்பெண்ணின் அலறல் சத்தத்தைக் கேட்ட பலர் கண்டும் காணாமல் விலகிச் சென்றதாக கண்டறியப் பட்டது. எனவே, கண்ணுக்கெதிரே குற்றம் நடந்தாலும் கூட டெல்லியில் தட்டிக் கேட்பவர்கள் குறைவு தான் என அந்நிகழ்ச்சி வெளிச்சம் போட்டுக் காட்டியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications