ஆண்களை இழுக்கும் நோய் ஆசாராம் மீது புகார் கூறிய சிறுமிக்கு உள்ளது - ஜெத்மலானி
ஜோத்பூர்: சாமியார் ஆசாராம் பாபு மீது பாலியல் பலாத்கார புகார் கூறிய சிறுமிக்கு வினோதமான நோய் உள்ளது. அதாவது ஆண்களை இழுக்கும் நோய் அச்சிறுமிக்கு உள்ளது என்று ஆசாராமின் வழக்கறிஞரான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.
ஆசாராம் பாபு தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீதான விசாரணை ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தின் ஜோத்பூர் கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆசாராம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி வாதிடுகையில், போலீஸார் தாக்கல் செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் நிறைய தவறுகள் உள்ளன. குற்றம் நடந்தபோது இருந்த நிகழ்வு, அ்ப்பெண்ணின் வயது உள்பட அனைத்திலுமே முறைகேடு நடந்துள்ளது.
இச்சிறுமிக்கு நீண்ட காலமாகவே ஒரு நோய் உள்ளது. அதாவது ஆண்களை வளைக்கும் நோய் அது. இதுகுறித்து காவல்துறையினரிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது விசாரணையிலும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டுள்ளளது என்றார் ஜெத்மலானி.
சுமார் ஒரு மணி நேரம் வாதாடினார் ஜெத்மலானி. அதன் பின்னர் நீதிபதி நிர்மல் ஜீத் கெளர், விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் கேஸ் டைரியை அடுத்த விசாரணையின்போது தாக்கல் செய்யுமாறும் காவல்துறைக்கு அவர் உத்தரவிட்டார்.