டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சிறுமி மரணம் - இளைஞர் கைது
டெல்லி: டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்டு எரிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.
டெல்லி அருகே உள்ள கிரேட்டர் நொய்டாவை ஒட்டியுள்ள திக்ரி கிராமத்தில் வசித்த 16 வயது சிறுமியுடன் பக்கத்து வீட்டு வாலிபர் நட்பாக பழகி வந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது பெற்றோருடன் அந்த சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தார். பெற்றோர் ஒரு அறையிலும் சிறுமி வேறொரு அறையிலும் தூங்கினார்கள்.
அப்போது அந்த வாலிபர் வீட்டுக்குள் புகுந்து சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி சத்தம் போட்டாள். உடனே பெற்றோர் திடுக்கிட்டு எழுந்து சென்று பார்த்தபோது அந்த வாலிபர் சிறுமியின் தலையில் தாக்கி விட்டு தப்பி ஓடினார். போகும்போது அந்த வீட்டுக்கும் தீவைத்துச் சென்றார். பெற்றோர் தீயில் இருந்து தப்பி விட்டனர். ஆனால் சிறுமியின் தலையில் காயம்பட்டதால் தப்பிச்செல்ல முடியாமல் வீட்டினுள் சிக்கிக் கொண்டார்.
எரியும் நெருப்பில் இருந்து சிறுமியை மீட்ட பெற்றோர் மருத்துவமனையில் சேர்த்தனர். 95 சதவீத அளவுக்கு தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிவந்த சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணம் அடைந்தார். இதற்கிடையே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.