டெல்லி பல்கலைக்கழக கழிப்பறையில் மாணவிகளை ஆபாசமாக படமெடுத்த மர்ம நபர்!
டெல்லி: டெல்லி பல்கலைக் கழக மாணவிகள் கழிப்பறையில் ஒளிந்திருந்து மர்ம நபர் ஒருவர் செல்போனில் தங்களை ஆபாசமாக படமெடுத்தாக குறிப்பிட்ட சில மாணவிகள் சார்பில் போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
நேற்று மதியம் சுமார் 12.30 மணியளவில் டெல்லி பல்கலைக்கழக கழிப்பறைக்குச் சென்ற முதுகலை பயிலும் மாணவிகள் சிலர், மர்மநபர் ஒருவர் ஒளிந்திருந்து கழிவறைக் காட்சிகளை செல்போனில் படமெடுப்பதைக் கண்டு அதிர்ந்து போய் கூச்சலிட்டுள்ளனர்.
மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு மற்ற மாணவ-மாணவிகள் அங்கு வந்து சேரும் முன் சம்பந்தப் பட்ட நபர் தலைமறைவாகி விட்டதாகக் கூறப்படுகிறது.
உடனடியாக, இது குறித்து போலீசுக்கும், பல்கலைக் கழக நிர்வாகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக விரைந்து வந்த போலீசார் பல்கலைக் கழக எல்லைக்குள் இருந்தவர்களின் செல்போன்களை சோதனைச் செய்துள்ளனர். ஆனால், குற்றவாளி சிக்கவில்லை. அதனைத் தொடர்ந்து, மாணவிகள் அளித்த புகாரை பதிவு செய்து, குற்றவாளியைத் தேடும்பணியை முடுக்கி விட்டுள்ளனர்.
தங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் எனக் கோரி, பல்கலைக் கழக மாணவ-மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீஸ் மற்றும் நிர்வாகத்திற்கெதிராக கோஷங்களை எழுப்பினர்.












Click it and Unblock the Notifications