தாயை உயிரோடு எரித்த கொலைகார தந்தை.... சமூக வலைதளங்களில் நீதி கோரும் சிறுமிகள்!!
லக்னோ: தந்தையால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட தங்களது தாய்க்கு சமூக வலைத்தளங்களில் இரண்டு சிறுமிகள் நீதி கேட்டு வருகின்றனர்.
உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தேவிபுரா பகுதியில் வசிப்பவர் மனோஜ் பன்சால். இவருக்கு 15 மற்றும் 11 வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுமிகள் இருவரின் கண் முன்னே மனைவியை தீ வைத்து எரித்து கொலை செய்ததாக சிறுமிகள் இருவரும் தந்தையின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக கடந்த ஜுன் மாதம் 14ம் தேதி அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவிற்கு கடிதம் ஒன்றை சிறுமிகள் இருவரும் எழுதியுள்ளனர். அதில் தங்களைப் பெற்றெடுத்த தாயை, தந்தையும் மற்றும் சிலரும் சேர்ந்து தீ வைத்து எரித்தனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்தக் கொலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களை போலீசார் இன்னும் கைது செய்யவில்லை என்றும் சிறுமிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மாநில முதலமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர்கள் இருவரும் சமூக வலைத்தளங்களில் தங்களது அவல நிலையை தெரிவித்து, நீதி கேட்டு வருகின்றனர்.
இதனையடுத்து, போலீசார் அதிகாரி மான் சிங் சவுகான், இந்தக் கொலைக் குறித்து தீவிரமாக விசாரித்து வருவதாகவும், குற்றவாளிகளைப் பிடிக்க முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிறுமிகள் இருவருக்கும் தகுந்த பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.