தலித் மாணவர்களை விஷம் கொடுத்து கருணைக் கொலை செய்து விடுங்கள்: ரோகித் வெமுலா கடிதம்
ஹைதராபாத்: ரோகித் வெமுலாவின் தற்கொலை நாடுமுழுவதும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியலைகளை உருவாக்கியுள்ள நிலையில் தற்கொலை செய்வதற்கு முன்னதாக கடந்த டிசம்பர் மாதத்திலேயே பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. தலித் மாணவர்கள் சேரும் போதே கொடிய விஷத்தையும், விடுதியில் சேரும் தலித் மாணவர்களுக்கு தாம்பு கயிரையும் கொடுத்து விடுங்கள் என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்பை நிறைவு செய்த ஆய்வு மாணவரான வெர்முலா ரோகித் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு எழுதிய கடிதம் வெளியான நிலையில் அவர் ஒரு மாதத்திற்கு முன்பாக எழுதிய மற்றொரு கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

பல்கலைக்கழகத்தின் துணை வேந்தரான அப்பா ராவிற்கு, அவர் கைப்பட எழுதியுள்ள இந்த கடிதம்:
"மாணவர்கள் சேர்க்கைக்காக பல்கலைக்கழகத்திற்கு வரும் போதே, நீங்கள் அம்பேத்கரை படிப்பதாக இருந்தால் இதை உபயோகியுங்கள் என்ற வழிகாட்டுதலுடன் தயவு செய்து 10 மில்லி கிராம் சோடியம் அசைட்டை (கொடிய விஷம்) கொடுத்து விடுங்கள். இதேபோல் கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் உற்ற துணையான தலைமை வார்டனிடமிருந்து நல்ல தாம்புக்கயிறையும் கொடுத்து விடுங்கள்" என்று மிகுந்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தானும் தன்னுடைய நண்பர்களும் ஏற்கனவே தலித் சுயமரியாதை இயக்கத்தில் உறுப்பினர்களாக இருப்பதாகவும் அவ்வளவு எளிதாக அதிலிருந்து வெளியேற இயலாதென்றும் தெரிவித்துள்ள அவர், "மேன்மை பொருந்தியவரே, தயவு செய்து என்னைப் போன்ற மாணவர்களைக் கருணைக் கொலை செய்து விடுங்கள்" என்றும் வேதனை பொங்க இக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ரோகித் தற்கொலை
இந்த கடிதத்தை எழுதிய மூன்று நாட்களுக்கு பிறகு, கடந்த டிசம்பர் 21ம் தேதி ரோகித் உள்ளிட்ட 5 மாணவர்களை விடுதி, உணவகம், நூலகம் என்று மாணவர்கள் பயன்படுத்தும் பொதுவெளி எதையும் பயன்படுத்தக் கூடாது என்று பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இத்தகைய சமூக புறக்கணிப்பால் இரண்டு வாரகாலமாக பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே கூடாரம் அமைத்து பாதிக்கப்பட்ட பிற மாணவர்களுடன் இணைந்து போராடி வந்த ரோகித், பல்கலைக்கழகத்தின் தொடர் நெருக்கடிகளின் காரணமாகவே கடந்த ஞாயிறு அன்று மாலை தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்கள் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் மாணவர் தற்கொலை
ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது புதிதல்ல. 2008 பிப்ரவரி மாதம், இதே பல்கலைக்கழகத்தில் இயற்பியல் துறையில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த செந்தில் தற்கொலை செய்து கொண்டார். இவர் மாரடைப்பால் இறந்தார் என்று கூறப்பட்டது. பின்னர் அது இயற்கை மரணம் அல்ல என்று கண்டுபிடிக்கப்பட்டது. காரணங்களை ஆராய்ந்த போது, ஆராய்ச்சி துறையில் இருந்த ஆசிரியர்கள் அனைவரும் உயர்சாதியை சேர்ந்தவர்கள். ஆதலால் தலித் மாணவர்களுக்கு வழிகாட்ட ஒப்புக்கொள்ளவில்லை எனவும், இதனால் வழிகாட்டுதல் இல்லாமல் ஒரு பாடத்தில் தேர்ச்சிபெறாமல் போகவே, மனம் உடைந்து செந்தில் தற்கொலை செய்து கொண்டார் என்றும் கூறப்பட்டது.
தலித் குழந்தைகள்
சில நாட்களுக்கு முன் ஒரு தேசிய நாளிதழில் வெளிவந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில், ஆரம்பக் கல்வி கூட கிடைக்காமல் இருக்கும் குழந்தைகளில் 49 சதவீதம் தலித் குழந்தைகளும், பழங்குடி இனக் குழந்தைகள்தான் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆறிலிருந்து பதிமூன்று வயது வரை உள்ள குழந்தைகளில், 60 லட்சம் பேர் பள்ளிக்கு சென்று கல்வி பெற முடியாமல் இருப்பதாகவும், அதில் பாதி தலித் மற்றும் பழங்குடியினர் எனவும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எரிக்கப்பட்ட ரோகித்
ரோகித் வெமுலாவின் இறுதி காரியங்கள் அவருடைய கிராமமான உப்பலில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு செல்ல தயாராகி கொண்டிருந்தனர். அதே நேரத்தில், ரோகித் வெமுலாவின் இறுதி காரியங்களை யாருக்கும் தெரியாமல் மிக ரகசியமாக அம்பேர்பேட் பகுதியில் வைத்து செய்து முடித்திருக்கிறார்கள் போலீசார். இறுதி காரியங்களை செய்வதற்கு ரோகித்தின் பெற்றோரை கூட அழைக்காமல், தகன மண்டப பணியாட்கள் மூலமாகவே நடத்தி முடித்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications