குடியரசுத் தலைவருடன் தமிழக விவசாயிகள் இன்று சந்திப்பு: ஜி.கே.வாசன் ஏற்பாடு!!
டெல்லி: டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் இன்று மாலை குடியரசுத் தலைவரை சந்தித்து தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளிக்கவுள்ளனர். குடியரசு தலைவருடனான இந்த சந்திப்புக்கு தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஏற்பாடு செய்துள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவேண்டும், விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 15வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை தமிழகத்தை சேர்ந்த அரசியல் கட்சியினர் மற்றும் மத்திய அமைச்சர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டெல்லி ஜந்தர்மந்தரில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளதாக குற்றம் சாட்டினார்.

நாடு முழுவதும் விழிப்புணர்வு
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவே டெல்லியில் போராட்டம் நடைபெறுவதாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்கவில்லை என்று குற்றம் சாட்டிய ஜி.கே.வாசன், தமிழக விவசாயிகள் போராட்டத்தால் நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அரசுகள் மவுனம் காக்க கூடாது
இனியும் மத்திய, மாநில அரசுகள் மவுனம் காக்க கூடாது என்றும், போராட்டத்தை ஒத்திவைக்க விவசாயிகளுக்கு வாசன் கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய கடனை ரத்து செய்யவில்லை என்றும், புதிய பயிர்க்கடனை தமிழக அரசு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

குடியரசு தலைவருடன் சந்திப்பு
இன்று மாலை 7.30 மணிக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அய்யாக்கண்ணு உள்ளிட்ட தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாக ஜிகே.வாசன் கூறினார். இன்று மாலை ஜி.கே.வாசனுடன் சென்று குடியரசுத் தலைவரை சந்திக்கும் தமிழக விவசாயிகள், தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை குடியரசுத் தலைவரிடம் அளிக்கவுள்ளனர்.

திமுக எம்பிக்களும் சந்திப்பு
இதனிடையே திமுக எம்பிக்கள் டிகேஎஸ்.இளங்கோவன் தலைமையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய டிகேஎஸ்.இளங்கோவன், விவசாயிகளுக்காக திமுக தொடர்ந்து போராடும் என்றார்.

ஜெ.கஜானாவில்தான் பணம் சேர்ந்தது
அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்காக எதுவும் செய்யவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் அதிமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் ஜெயலலிதாவின் கஜானாவில் பணம் சேர்ந்ததாகவும் விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை என்றும் அவர் சாடினார்.












Click it and Unblock the Notifications