கோவா முதல்வராக பாரிக்கர் பதவியேற்கலாம்.. தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
கோவா முதல்வராக மனோகர் பாரிக்கர் பதவியேற்பதற்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் அவர் திட்டமிட்டபடி இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை.
டெல்லி : கோவா சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பின்னரே ஆட்சியமைக்க முடியும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளபோதிலும், முதல்வராக மனோகர் பாரிக்கர் இன்று பதவியேற்பதற்கு தடை விதிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதனால் இன்று மாலை 5 மணிக்கு பாரிக்கர் பதவியேற்பதில் சிக்கல் ஏதும் இல்லை.
கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் கடந்த சனிக்கிழமை வெளியானது. அதில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், பாஜக 13 இடங்களையும் பெற்றுள்ளன. இதனால் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவாவில் ஆட்சி அமைக்க 22 பேரின் ஆதரவு தேவை.
இதற்காக கோவா முன்னணிக் கட்சி, எம்ஜிபி கட்சி, சுயேச்சைகள் ஆகியோரை தங்கள் வசம் இழுத்து அவர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இரு கட்சிகளும் முயற்சித்தன. இதில் பாஜக வென்றது.
இதையடுத்து பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கர் முதல்வராக அறிவிக்கப்பட்டார். ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவா சட்டசபை காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் குழு தலைவர் சந்திரகாந்த் காவ்லேகர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இதை இன்று விசாரித்த தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான பெஞ்ச், கோவா சட்டசபையில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவும், அதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
அதேவேளையில், மனோகர் பாரிக்கர் முதல்வராக இன்று பதவியேற்பதற்கு தடை விதிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்தது. ஆனால் தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.