சிங்கக் காடுகளில் வலம் வந்த கிரிக்கெட் சிங்கம்
கிர்: இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக போற்றப்படுகிற சச்சின் டெண்டுல்கர் குஜராத் மாநிலம் கிர் காடுகளில் சிங்கங்களை தமது குடும்பத்தினருடன் கண்டு ரசித்தார்.
இந்திய கிரிக்கெட் வரலாற்றி உச்ச சாதனைகளைப் படைத்த சச்சின் டெண்டுல்கர், விளையாட்டு உலகில் இருந்து விடைபெற்றுக் கொண்டார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்து வரும் சச்சின் இரண்டு நாள் பயணமாக குஜராத் மாநிலம் சென்றார்.
குஜராத் மாநிலத்தை ஒட்டிய யூனியன் பிரதேசமான டையூவுக்கு மும்பையில் விமானம் மூலம் நேற்று முன் தினம் சச்சின் டெண்டுல்கர் தமது குடும்பத்தினருடன் சென்றார். பின்னர் டையூ அருகே உள்ள குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தில் இருக்கும் கிர் சரணாலயப் பகுதிக்கு அவர்கள் சென்றனர்.
அங்கு வனத்துறையினரின் பாதுகாப்பினருடன் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிங்கங்களை டெண்டுல்கர் குடும்பத்தினர் கண்டு மகிழ்ந்தனர்.
அதன் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று சோம்நாத் கோயிலுக்கு சென்று குடும்பத்தினருடன் டெண்டுல்கர் வழிபாடு நடத்தினர். அங்கிருந்து ராஜ்கோட் திரும்பிய அவர்கள் விமானம் மூலம் மும்பைக்கு திரும்பினர்..