மோடி வளர்த்த வாலிபர் 2012ம் ஆண்டே குடும்பத்துடன் இணைந்து விட்டார்? - பேஸ்புக் தகவலால் பரபரப்பு
டெல்லி: இந்தியப் பிரதமர் மோடியால் 16 ஆண்டுகள் பராமரிக்கப்பட்டு கடந்த ஞாயிறன்று தன் பெற்றோர் வசம் சேர்க்கப்பட்டதாக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்ட நேபாள வாலிபர், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன்னரே குடும்பத்துடன் இணைந்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு குடும்பத்தைப் பிரிந்த ஜித்பகதூர் என்ற 10 வயது நேபாள சிறுவனை குஜராத் முதல்வராக இருந்த மோடி சந்தித்தார். பின்னர் மோடி பராமரிப்பில் வளர்ந்த அச்சிறுவன் தற்போது 26 வயது வாலிபராக பி.பி.ஏ. பட்டதாரியாக உள்ளார்.
சமீபத்தில் ஜித்பகதூர் காலில் உள்ள 6 விரல்கள் மூலம் அவரது பெற்றோரை அடையாளம் கண்டறிந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, கடந்த ஞாயிறன்று மேற்கொண்ட நேபாள பயணத்தின் போது அவரது பெற்றோரிடம் ஜித்பகதூரைச் சேர்த்தார்.
பிரதமர் நரேந்திரமோடியின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.
அரசியல் உள்நோக்கம்...?
இந்நிலையில் மோடியால் ஒப்படைக்கப்பட்ட ஜித்பகதூர், ஏற்கனவே கடந்த 2012-ம் ஆண்டு தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்று பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அரசியல் உள்நோக்கத்திற்காக தற்போது மீண்டும் அவர் பெற்றோருடன் சேர்க்கப் பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
புகைப்பட ஆதாரம்...
இது தொடர்பாக, ஜித்பகதூர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2012-ம் ஆண்டு தன் குடும்பத்தினரை சந்தித்ததாகத் தெரிவித்துள்ள ஜித்பகதூர், அது தொடர்பாக புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
உறுதி...
இந்தப் பதிவு மூலம் ஜித்பகதூர் ஏற்கனவே நேபாளத்தில் உள்ள தன் குடும்பத்தினருடன் இணைந்து விட்டவர் என்பது உறுதியாகியுள்ளது.
குழப்பம்...
ஆனால் 10 வயதில் ஆமதாபாத் வந்த ஜித்பகதூர் 16 வருடங்கள் கழித்து அவரது 26-வது வயதில்தான் நேபாளம் திரும்பி இருப்பதாக மோடி தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பது குழப்பத்தை உண்டாக்கியுள்ளது.