வரதட்சணை ஒழிப்பு சட்டத்தின் கீழ் பெண் சாமியார் ராதே மா மீது வழக்கு
மும்பை: மும்பை அருகே வரதட்சணைக் கொடுமை தொடர்பாக பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் பெண் சாமியார் ராதே மா உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையின் கண்டிவ்லி பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண் ஒருவர் தனது கணவர் குடும்பத்தார் தன்னை கூடுதல் வரதட்சணைக் கேட்டு கொடுமைப் படுத்துவதாக போலீசில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில் சார்ட்டட் அக்கவுண்டண்ட் ஆன தனது கணவர், அவரது குடும்பத்தாருடன் சேர்ந்து தன்னை உடல் ரீதியாக துன்புறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது கணவரும், அவரது குடும்பத்தாரும் தன்னைத் தானே சாமியார் எனக் கூறிக் கொள்ளும் பெண் சாமியார் ராதே மாவின் தீவிர பக்தர்கள் என்றும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனால், கணவர் குடும்பத்தாரோடு, பெண் சாமியார் ராதே மாவின் பெயரையும் அப்புகாரில் அவர் சேர்த்துள்ளார்.
திருமணத்தின் போது தனது பெற்றோர் ரூ. 1.25 கோடி மதிப்புள்ள நகைகளை வரதட்சணையாக தந்ததாகவும், அவற்றை தங்கள் வசம் வைத்துக் கொண்டே கூடுதல் வரதட்சணைக் கேட்டு கணவர் வீட்டார் துன்புறுத்துவதாகவும் அப்பெண் தெரிவித்துளார்.
இந்தப் புகாரின் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், இது தொடர்பாக நீதிமன்றத்தின் உதவியை நாடியுள்ளார் அப்பெண்.
ஆனால், இந்தப் புகார் தொடர்பாக உரிய விசாரணை நடந்து வருவதாகவும், விசாரணைக்குப் பின்னரே குற்றவாளிகள் கைது செய்யப்படுவர் என்றும் கண்டிவ்லியின் சீனியர் இன்ஸ்பெக்டர் பவார் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications