கும்பமேளாவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள நகைகளுடன் ஜொலிக்கும் ‘தங்கபாபா’.. கடிகாரம் மட்டும் ரூ. 27 லட்சம்
ஹரித்துவார்: உத்தரகாண்ட்டில் நடைபெறும் கும்பமேளாவில், உடல் முழுவதும் தங்க நகைகள் அணிந்து வரும் ஒரு சாமியார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். எல்லாரும் அவரை "தங்க பாபா" என்று அழைக்கிறார்கள்.
சன் டிவியில் முன்பு ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று தங்க வேட்டை. முடிந்த அளவு தங்க நகைகளை அள்ளி அணிந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் நடிகை ரம்யாகிருஷ்ணன்.
அந்த நிகழ்ச்சிக்குப் பின் அதிக நகை அணிந்தவர்களைக் கண்டாலே தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணன் மாதிரி இருக்கியே என மற்றவர்கள் கேலி கிண்டல் செய்வார்கள்.

ஆண் சாமியார்...
தற்போதும் தங்கவேட்டை ரம்யாகிருஷ்ணனைப் போன்றே தங்கநகை அணிந்து ஒருவர் உத்தரகாண்டில் வலம் வருகிறார். ஆனால், அவர் பெண் அல்ல, ஆண். அதிலும் முற்றும் துறந்த சாமியார்.

கும்பமேளா...
ஆம், இவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்துவார் நகரில் நடைபெறும் கும்பமேளா நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளார். தங்கநகைகளை அணிந்து நடமாடும் நகைக்கடையாக உள்ள அவரை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து செல்கின்றனர்.

தங்கபாபா...
கொத்து, கொத்தாக தங்க செயின்கள் அணிந்திருக்கும் அந்த சாமியார் தினமும் அந்த நகைகள் அணிந்தபடியே புனித நீராடுகிறார். எல்லாரும் அவரை "தங்க பாபா" என்று அழைக்கிறார்கள்.

ரூ. 3 கோடி மதிப்பு...
கழுத்து நிறைய தங்க சங்கிலி, பத்து விரல்களிலும் மோதிரம் என அவர் அணிந்திருக்கும் நகைகளின் மதிப்பு சுமார் 15.5 கிலோ இருக்கும் எனக் கூறப்படுகிறது. அதன் மதிப்பு சுமார் ரூ.3 கோடியாகும்.

வைர கடிகாரம்...
அவர் தனது கையில் கட்டியுள்ள கடிகாரத்தின் மதிப்பு மட்டும் ரூ. 27 லட்சம் ஆகும். அது முழுவதும் வைரத்தால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் தொழிலதிபர்...
இந்த தங்க பாபாவின் உண்மையான பெயர் சுதீர்குமார். டெல்லியில் ஜவுளித்தொழில் செய்து வந்த இவர், தொழில் போட்டி காரணமாக அதிக பாவங்கள் செய்து விட்டாராம். அதனால் மனசாட்சி உறுத்தவே சாமியார் ஆகிவிட்டதாக கூறுகிறார்.

ஆதரவாளர்கள்...
எப்போதும் இவரைச் சுற்றி அவரது ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர். தங்கம் எந்தளவுக்கு அரிதானதோ, அந்தளவிற்கு தங்களது தங்கபாபாவும் அரிதானவர் என்கிறார்கள் அவர்கள்.
தான தர்மம்...
தங்க நகைகளால் மட்டுமின்றி தனது சேவைகளாலும் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்கிறார் இந்த தங்கபாபா. தினமும் நதிக்கரைக்கு தனது ஆதரவாளர்களுடன் வரும் இவர், அங்குள்ள ஏழை, எளியவர்களுக்கு தன்னால் இயன்ற தானம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications