பெண்களுக்கு ஒரு நல்ல செய்தி!... மகப்பேறுகால விடுமுறை 8 மாதங்களாக உயர்கிறது!!
டெல்லி: பணிக்குச் செல்லும் பெண்களுக்கு உதவும் வகையில் அவர்களின் மகப்பேறுகால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. இதனால் ஏராளமானோர் தாய்மையடைவதைக்கூட தள்ளிப் போடுகின்றனர்.
குழந்தை பிறந்த உடன் பணிக்குத் திரும்பும் பெண்கள் பல்வேறு உடல்நல பாதிப்புக்களுக்கு ஏற்படுவதுடன், குழந்தைக்கும் தாயின் அறவணைப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.

8 மாதம் விடுமுறை
இதனை கருத்தில் கொண்டு மத்திய அமைச்சர் மேனகா காந்தி, பணிக்குச் செல்லும் பெண்களின் மகப்பேறுகால விடுமுறையை 3 மாதத்தில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளார்.

அமைச்சர்கள் ஏற்பு
தற்போதிருக்கும் 3 மாத மகப்பேறு விடுமுறையை 8 மாதமாக உயர்த்த பரிந்துரை செய்துள்ளோம் என்று மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கூடுதல் செயலாளர் நுதன் குகா பிஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இந்த பரிந்துரையை பிரதமர் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் ஏற்றுக் கொண்டுள்ளனர். செயலாளர்கள் குழுவின் ஆலோசனைக்காக மத்திய அமைச்சரவை செயலகத்திடம் இந்த பரிந்துரை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரசவத்திற்கு முன்பு
இந்த 8 மாத விடுமுறை என்பது குழந்தை பிறப்பு நாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பிருந்தே விடுமுறை எடுக்க வழிவகை செய்யும். குழந்தை பிறந்த பிறகு 7 மாதங்கள் விடுமுறை அளிக்கப்படும். அமைச்சரவை செயலகம் ஒப்புதல் அளித்த பிறகு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு
அமைச்சரவை செயலகத்திடம் மட்டுமின்றி, அமைப்பு மற்றும் அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து பெண்களுக்கும் பேறுகால பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என மத்திய தொழிலாளர் நலத்துறையிடமும் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications