மே.வங்கம் ரயில் விபத்து: எக்ஸ்பிரஸ் மீது சரக்கு ரயில் மோதல்- சிதறிய பெட்டிகள்-பலி 15 ஆக அதிகரிப்பு!
டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம்புரண்டன, இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். தற்போது பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கத்தின் செலடா நோக்கி சென்ற கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நியூ ஜல்பைகுரி ரயில் நிலையத்தில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் நின்று கொண்டிருந்தது. இன்று காலை 9 மணியளவில் நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் அதிவேகத்தில் மோதியது. இதில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலின் பின் பகுதியில் இருந்த 3 பெட்டிகள் தடம்புரண்டு உருக்குலைந்தன.

இந்த விபத்தில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த பயணிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இடிபாடுகளில் பலரும் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்போது சம்பவ இடத்தில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி அதிர்ச்சி தெரிவித்துள்ளார். மேலும் மீட்புப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளதாகவும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேலும் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 033-2350-8794 , 033-238-33326 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு ரயில் பயணிகள் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமது எக்ஸ் பக்கத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ரயில்வே துறையின் மூத்த அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். மேலும் ரயில் விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விரைந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டார்ஜிலிங் கூடுதல் எஸ்பி அபிஷேக் ராய், தற்போது வரை 5 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 20 முதல் 25 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். நின்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications