கூகுள்.காமின் “ஒரு நிமிட ஓனர்” சன்மய்க்கு ரூ.8.14 லட்சம் பரிசளித்து கவுரவித்த கூகுள் நிறுவனம்!
டெல்லி: கூகுள் வெப்சைட்டினை விலைக்கு வாங்கி ஒரு நிமிட உரிமையாளராய் இருந்த இந்தியர் ஒருவருக்கு 8.14 லட்ச ரூபாயை பரிசளித்துள்ளது அந்த நிறுவனம்.
சன்மய் வேத் என்கின்ற அந்த அமெரிக்க வாழ் இந்தியருக்கு ரூ. 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசளித்தது.
இந்நிலையில் அந்த பரிசுத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிப்பதாக சன்மய் வேத் அறிவித்ததை அடுத்து அதை இரு மடங்காக ரூபாய் 8.14 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளது கூகுள்.

ஒரு நிமிட உரிமையாளர்:
இதுகுறித்து கூகுள் நிறுவனம், "சன்மய் வேத் என்ற இணைய ஆய்வாளர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கூகுள் இணையதளத்தை விலைக்கு வாங்கி ஒரு நிமிடம் உரிமையாளராக இருந்தார்.

இரட்டிப்பு பரிசுத் தொகை:
இதையடுத்து அவருக்கு ரூபாய் 4.07 லட்சத்தை கூகுள் நிறுவனம் பரிசாக அறிவித்திருந்தது. அந்தத் தொகையை சேவைப் பணிகளுக்கு அளிக்க உள்ளதாக சன்மய் வேத் அறிவித்திருந்தார். எனவே, பரிசுத் தொகையை இரட்டிப்பாக வழங்குவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் விற்பனைக்கு:
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவரான சன்மய் வேத் தற்போது அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவது அவரது பொழுதுபோக்காகும். அவ்வாறு ஒருமுறை இணையதள முகவரிகளை விலைக்கு வாங்குவதற்காக இணையத்தில் தேடிக் கொண்டிருந்தபோது கூகுள் டாட் காம் விற்பனைக்கு என்ற தகவல் வந்தது.

பணம் கட்டிய சன்மய்:
முதலில் அவர் அதை நம்பவில்லை என்றபோதிலும் அந்தத் தகவல் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்ததால் சன்மய் வேத் கூகுள் டாட் காமை விலைக்கு வாங்குவதற்காக பணம் கட்டினார்.

பரிசளித்த நிறுவனம்:
கூகுள் டாட் காம் விலைக்கு வாங்கப்பட்ட ஒரு நிமிடத்துக்குள் அந்த நடவடிக்கையை கூகுள் நிறுவனம் ரத்து செய்தது. பிறகு அவ்வாறு தவறான அறிவிப்பு வெளியானதை சுட்டிக் காட்டியதற்காக சன்மய் வேதுக்கு பரிசளிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications