இந்தியாவில் பணியாற்ற சிறந்த நிறுவனம் கூகுள்- கருத்துக் கணிப்பில் தகவல்
மும்பை: இந்தியாவில், பணியாற்ற சிறந்த நிறுவனம் என்ற பிரிவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக கூகுள் முதல் இடத்தை பிடித்துவருகிறது.
தி எக்கனாமிக் டைம்ஸ் பத்திரிகை சார்பில், இந்தியாவில் பணியாற்ற சிறந்த நிறுவனங்கள் எவை என்பது குறித்து கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. இதற்காக 20 வகையான துறைகளை சேர்ந்த 600 நிறுவனங்களில் பணியாற்றும் சுமார் 1.7 லட்சம் பேரிடம் கருத்து கேட்கப்பட்டது,. அவர்கள் கூறிய கருத்துகளின் அடிப்படையில், கூகுள் முதலிடத்தை பிடித்துள்ளது.
வேலை பார்ப்பதற்கு பெருமை, நிர்வாகத்தின் நன்மதிப்பு, ஊழியர்களை மதிப்புடன் நடத்துவது போன்ற காரணங்களுக்காக கூகுள் முதலிடம் பிடித்துள்ளது. இந்தபட்டியலில் இரண்டாவது இடம் இன்டெல் நிறுவனத்துக்கும், மூன்றாவது இடம் மாரியட் ஹோட்டல் நிர்வாகத்துக்கும் கிடைத்துள்ளது. கடந்தாண்டு 9வது இடத்தை பிடித்திருந்த அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் தற்போது 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
முதல் 10 இடங்களை பிடித்த நிறுவனங்களில் இரு இந்திய நிறுவனங்களும் உள்ளன. கோத்ரேஜ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ், மற்றும் உஜ்ஜிவான் நிதி சேவை ஆகிய நிறுவனங்கள் முதல் பத்து இடங்களுக்குள் வந்துள்ளன.
வாக்களித்தவர்களில், 73 சதவீதம்பேர் கூகுளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். கடந்தாண்டும் இதே அளவுக்கு ஆதரவு கிடைத்திருந்தது. தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக இந்த கருத்துக்கணிப்பில் கூகுள் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.