இந்தியாவின் முக்கிய பகுதிகளை வரைபடமாக வெளியிட்ட கூகுள்: சிபிஐ விசாரணை
டெல்லி: அனுமதி பெறாமல், கூகுள் நிறுவனம், இந்திய வரைபடங்கள் குறித்த விவரங்களை வெளியிட்டதாக புகார் எழுந்துள்ளதையடுத்து சி.பி.ஐ., அந்த நிறுவனத்துக்கு எதிராக, பூர்வாங்க விசாரணையை துவக்கியுள்ளது.

அமெரிக்க நிறுவனம்
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும், இணையதள சேவை மற்றும் அது தொடர்பான தொழில்நுட்பங்களை வழங்கும் கூகுள் நிறுவனம், 2013ல், மேபதோன் 2013 என்ற பெயரில், ஒரு வரைபட போட்டியை ஏற்பாடு செய்தது.

முக்கிய இடங்கள்
இந்த போட்டியில் பங்கேற்பவர்கள், தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகள், ஓட்டல்கள் குறித்த வரைபடங்களை வெளியிடலாம் என, அந்த நிறுவனம் தெரிவித்து இருந்தது.

அனுமதி பெறவில்லை
ஆனால், இதற்கான முறையான அனுமதியை, நாட்டின் வரைபடம் தொடர்பான விவகாரங்களை கையாளும், 'சர்வே ஆப் இந்தியா'விடம் பெறவில்லை என்று புகார் எழுந்தது. இந்த வரைபடத்தில் நாட்டின் முக்கியமான சில பகுதிகளை, இந்திய வரைபடத்தில் இருந்து நீக்கிவிட்டதாகவும் கூகுள் மீது புகார் எழுந்தது.

சிபிஐ விசாரணை
இதுகுறித்து சி.பி.ஐ. பூர்வாங்க விசாரணையை துவக்கியுள்ளது. கூகுள் வரைபடம் தொடர்பான விவகாரங்களை கண்காணிக்கவும் சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.

தெரு பார்வை
கார்களில் கேமிராவை பொருத்தி ஒவ்வொரு தெருவையும் படம் பிடித்து மேப்பில் சேர்க்க கூகுள் திட்டமிட்டிருந்தது. இதற்கு அனுமதி கொடுக்க கூடாது என்று அப்போதைய எதிர்க்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. தீவிரவாத செயல்களுக்கு 'ஸ்ட்ரீட் வியூ' தொழில்நுட்பம் உதவும் என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது. இதையடுத்து அந்த திட்டத்தை செயல்படுத்த அப்போதைய மத்திய அரசு கூகுளுக்கு தடை விதித்தது.












Click it and Unblock the Notifications