பாஜக கூட்டணியில் மற்றொரு 'விக்கெட் அவுட்'.. வெளியேறியது கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா
கொல்கத்தா: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா (GJM) கட்சி வெளியேறியுள்ளது. சிவசேனா, தெலுங்கு தேசம் வரிசையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மற்றொரு கட்சியும் வெளியேறியுள்ளது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கத்தில் கால்பதிக்க பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ள சூழலில், கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா வெளியேற்றம் என்பது, முக்கியத்துவம் பெறுகிறது.
கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சி தலைவர் எல்எம் லாமா இன்று நிருபர்களிடம், தங்கள் கட்சி எடுத்துள்ள இந்த முடிவு பற்றி அறிவித்தார்.
தேர்தல் கூட்டணி மட்டுமே
அவர் கூறுகையில், "பாஜக, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா கட்சியுடன் வெறும் தேர்தல் கூட்டணி மட்டுமே வைத்துள்ளது என்று, மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வுகளுக்கான கூட்டணி இது இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், கூர்க்காக்கள் மீது பாஜகவுக்கு நிஜமான அக்கறை இல்லை என்பது அம்பலமாகியுள்ளது. கூர்க்கா மக்களின் கனவுதான் எனது கனவு என்று மோடி கூறிய வார்த்தைகளுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விட்டது" இவ்வாறு, லாமா தெரிவித்தார்.
டார்ஜிலிங்
மேலும், லாமா கூறுகையில், "2009 மற்றும் 2014ம் ஆண்டுகளில், டார்ஜிலிங் லோக்சபா தொகுதிகளை, கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா, பாஜகவுக்கு விட்டுக்கொடுத்தது. பாஜக சார்பில், 2009ல் ஜஷ்வந்த் சிங் இத்தொகுதியில் போட்டியிட்டார், 2014ல் எஸ்.எஸ்.அலுவாலியா போட்டியிட்டார். இவர்களுக்காக கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா தேர்தல் பணியாற்றியது.
டார்ஜிலிங்கை கெடுத்துவிட்டார்கள்
மேற்கு வங்கத்தின் நுழைவாயில் டார்ஜிலிங். அதை பாஜகவுக்காக திறந்து வைத்தோம். பல வருடங்களாகவே எங்கள் மக்கள், தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைப்பார்கள் என காத்திருந்தோம். ஆனால், பாஜக மக்களை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டது. டார்ஜிலிங் இப்போது நம்பிக்கையை இழந்ததற்கும், அங்கு அசாதாரண சூழல் நிலவுவதற்கும், பாஜகதான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசு நடவடிக்கை இல்லை
மேற்கு வங்கத்தில், டார்ஜிலிங் மற்றும் அதை ஒட்டியுள்ள மலைப்பகுதிகளை பிரித்து, கூர்க்காலாந்து தனி மாநிலம் அமைக்க கோரி, கடந்த ஆண்டு ஜூனில் துவங்கி, 104 நாட்கள் பெரும் போராட்டத்தை கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினர் முன்னெடுத்தனர். இதில் பலர் கொல்லப்பட்டனர், சிறைகளில் அடைக்கப்பட்டனர். கூர்க்கா மக்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக அப்போது உறுதியளித்த மத்திய அரசு இதுவரை அதன்பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதும் கூர்க்கா முக்தி மோர்ச்சா அமைப்பினரின் குற்றச்சாட்டாக உள்ளது.