'கிரிமினல்' எம்.பி, எம்.எல்.ஏக்கள் பதவியைக் காப்பாற்ற மத்திய அரசு அவசரச் சட்டம்!

நீதிமன்ற உத்தரவையும் மீறி கிரிமினல் எம்.பி எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் மத்திய அரசின் இந்த அவசர சட்டத்துக்கு பல்வேறு அமைப்புகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
குற்ற வழக்குகளில் சிக்கி 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எம்.பி எம்.எல்.ஏ.க்களை உடனடியாகத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் தீர்ப்பளித்தது. இதனால் தண்டனை பெறும் மக்கள் பிரதிநிதிகள் மேல் முறையீடு செய்வதற்கு முன்பே பதவியை இழக்கும் அபாயம் உருவானது.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்த விகாரத்தில் புதிய சட்ட திருத்தம் தேவை என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் வலியறுத்தப்பட்டது.
இதையடுத்து இந்தத் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தது. இதை விசாரித்த நீதிபதிகள் கிரிமினல் வழக்கில் தண்டனை விதிக்கும் தீர்ப்பு சரிதான் எனவும் ஆனால் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தால் நீதிமன்றம் அதில் தலையிடாது என்றும் கூறியது.
இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிராகரிக்கும் வகையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இது லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த மசோதா இன்னும் நிறைவேறவில்லை.
அரசியலமைப்பின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 8(4)வது பிரிவை ரத்து செய்கிறது இந்த அவசர சட்டம்.
எம்.பி எம்எல்ஏக்கள் உடனடியாகப் பதவியிழப்பதைத் தடுக்கும் மசோதா ராஜ்யசபாவில் நிறைவேற வேண்டுமானால் நாடாளுமன்றம் கூட வேண்டும். ஆனால் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்க இன்னும் 3 மாதங்கள் உள்ளன. எனவே எம்.பி எம்.எல்.ஏ.க்கள் உடனடியாக தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தடுக்க ஜனாதிபதி மூலம் ஓர் அவசரச் சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இதன்படி இந்த அவசர சட்டத்தை இயற்றி அதை மத்திய அமைச்சரவைக்கு அனுப்பி வைத்தது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்ததை அடுத்து இந்த சட்ட மசோதா பார்லிமென்ட் நிலைக் குழுவுக்கு அனு்ப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஜனாதிபதி கையெழுத்திட்ட பின் அது நடைமுறைக்கு வரும்.
இந்த அவசர சட்டத்தின்படி கிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தண்டனையை எதிர்த்து 90 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்திருந்தாலோ அல்லது மேல்கோர்ட்டுகளில் தண்டனைக்கு எதிராக தடை உத்தரவு பெற்றிருந்தாலோ அவர்களை பதவி நீக்கம் செய்ய முடியாது. அவர்கள வழக்கம் போல் பார்லிமென்ட் மற்றும் சட்டசபை கூட்டத் தொடர்களில் பங்கேற்கலாம். அதே நேரத்தில் இவர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது. ஆனால், பார்லிமென்டில் ஓட்டெடுப்பு நடக்கும்போது அதில் அவர்கள் பங்கேற்க முடியாது.
லோக்சபாவில் எம்.பிக்களாக உள்ள 543 பேரில் 162 பேர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த 162 பேரில் 76 பேர் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடு முழுவதும் உள்ள சட்டமன்ற எம்எல்ஏக்களில் 4,032 பேர் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர்களில் 14 சதவீதம் பேர் மீது 5 ஆண்டுடுகளுக்கும் அதிகமான சிறைத் தண்டனை பெறும் வகையிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications