ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு புதிய மனு தாக்கல்
டெல்லி: சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடகா புதிய மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளது. அதில், லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களை வழக்கில் சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்தது கர்நாடக ஹைகோர்ட். இதை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. திமுகவின் அன்பழகனும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், 3 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்நிலையில், கர்நாடக அரசு சார்பில் இன்று புதிதாக ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், லெக்ஸ் புராப்பர்டீஸ் உள்ளிட்ட 6 நிறுவனங்களையும், இந்த வழக்கில் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த 6 நிறுவனங்களும் ஜெயலலிதாவுடையதுதான் என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே அன்பழகன் தரப்பும் இதே கோரிக்கையை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.