பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மீண்டும் உயர்த்தி மத்திய அரசு உத்தரவு
டெல்லி: பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.1.50 உயர்த்தி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரப்படி பெட்ரோல், டீசல் விலையை மாதந்தோறும் 2 முறை எண்ணெய் நிறுவனங்கள் முடிவு செய்து வருகின்றன. இந்நிலையில், பெட்ரோலுக்கான கலால் வரியை லிட்டருக்கு ரூ.1, டீசல் மீதான கலால் வரியை ரூ.1.50 அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள கலால் வரி மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.3200 கோடி வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கலால் வரி உயர்வால் பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் உயர்வு இருக்காது என கூறப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் கடும் சரிவைத் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் பரவலாக எழுந்தது வந்த நிலையில் கச்சா எண்ணெய் விலை சரிவின் பலனை நுகர்வோருக்கு வழங்காமல் கலால் வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஒரே மாதத்தில் கலால் வரி உயர்த்தப்படுவது 3 -வது முறை ஆகும்.












Click it and Unblock the Notifications