சொந்த வீடு.. கார்.. பைக் இருக்கா?- அப்போ மத்திய அரசே உங்க கேஸ் மானியத்தை “கட்” செய்யப் போகுதாம்!
டெல்லி: சொந்த வீடு, கார், இருசக்கர வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மானியத்தை தாமாகவே நிறுத்திவிடலாம் என மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு மானியம் இப்போது நுகர்வோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர்கள் மட்டும் மானியம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வசதிப்படைத்தவர்கள் மானியத்தை விட்டுக்கொடுக்க வேண்டும் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்டது.

இதனை ஏற்று இதுவரை சுமார் 42 லட்சம் பேர் மானியம் வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் சொந்த வீடு, கார் வைத்திருப்பவர்களுக்கு தாங்களே நிறுத்திவிட மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். டெல்லியில் நிதி அமைச்சகம் ஏற்பாடு செய்த பொருளாளதார கருத்தரங்கம் ஒன்றில் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை சூசகமாக வெளியிட்டுள்ளார்.
குறிப்பிட்ட அளவிற்கு அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு மானிய விலையில் சமையல் சிலிண்டர் வழங்கத் தேவையில்லை. இதற்கான நிர்வாக முடிவை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டது. இந்த முடிவால் நலிவடைந்தவர்களுக்கு நம்மால் உதவ முடியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இதனால் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் மானியம் ரத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே திட்டத்தை முந்திய காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் பெட்ரோலியத்துறை அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டி முன்வைத்தார். ஆனால் கூட்டணிக் கட்சிகளின் எதிர்ப்பையடுத்து அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில் தனி பெரும்பான்மையுடன் உள்ள மோடி தலைமையிலான பாஜக அரசு இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் குறியாக உள்ளது.












Click it and Unblock the Notifications