மத உணர்வுகளைத் தூண்டினால் உடனே முடக்குவோம்- 40 இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு
டெல்லி: மத வெறுப்புணர்வைத் தூண்டிவிடும் வகையில் கருத்துகளை வெளியிட்ட சுமார் 40 இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில் ஈராக், சிரியாவில் செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாகவும், அந்த அமைப்புக்கு இந்தியாவில் ஆள் சேர்க்கும் வகையிலும் இணையதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதேபோல், மியான்மர் நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள், ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்க கூட்டணிப் படைகளுக்கு எதிராகப் போரிடுவோர் குறித்த விடியோ காட்சிகளும் இணையதளங்களில் வெளியிடப்படுகின்றன.
இதுபோன்ற தகவல்களால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மத்திய அரசு கருதுகிறது. எனவே, சிறுபான்மையினர் இடையே ஆத்திரத்தை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகளை வெளியிட்ட இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக 2009ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் இணையதள வசதிகளை வழங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் கடந்த ஜனவரி மாதம் 29 ஆம் தேதியன்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து அந்நிறுவனங்கள் அனைத்தும் அத்தகைய இணையதளங்களை முடக்கிவிட்டன.
எனினும், சில இணையதளங்கள் இன்னும் இயங்கி வருகின்றன. ஆனால், அந்த இணையதளங்களை முழுமையாக முடக்க இயலாது என்றும், அந்த இணையதளங்கள் பாதுகாக்கப்பட்ட இணையதள நெறிமுறைகளின் கீழ் செயல்பட்டு வருகின்றன என்றும் அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 8 ஆம் தேதி மத்திய அரசு பிறப்பித்த மற்றொரு உத்தரவில், மத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் சமூக வலைதளங்களில் இருக்கும் கணக்குகள், அதில் வெளியிடப்பட்ட தகவல்களை உடனடியாக முடக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறது. விடியோக்களை பகிரும் தளங்களுக்கும் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.
இதேபோல், தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையிலான கருத்துகள் இடம் பெற்றிருந்ததாக 32 இணையதளங்களை முடக்குவதற்கு மத்திய அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலும் உத்தரவு பிறப்பித்திருந்தது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து, பல இணையதளங்கள் முடக்கப்பட்டன. அதில், விடியோவைப் பகிரும் பிரபல இணையதளங்களும் அடங்கும். ஆனால், சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கிய பிறகு, முடக்கப்பட்ட இணையதளங்களில் சிலவற்றுக்கு மட்டும் மீண்டும் அனுமதியளிக்கப்பட்டது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.