கண்ணீர் விட வைக்கும் வெங்காயம்: இறக்குமதி விதிகளை தளர்த்திய மத்திய அரசு
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்வதற்கான விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது.
வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவாக வட மாநிலங்களில் கிலோ நூறு ரூபாய்க்கு விற்பனையாகிறது. வட இந்தியாவில் பெய்து வரும் மழை காரணமாக வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதும், வெங்காயத்தை பதுக்கி வைத்திருப்பதும், விலை உயர்வுக்கு காரணம் என கூறப்படுகிறது.

விதிமுறைகளில் தளர்வு
இதனிடையே, பாகிஸ்தான், ஈரான், சீனா, எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் ஒப்பந்த புள்ளிகளை, தேசிய வேளாண்மைக் கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இதற்காக இறக்குமதி விதிமுறைகளில் சில அம்சங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
3 வாரங்களுக்கு
வெங்காய விலை உயர்வு பற்றி பேசிய மத்திய வேளாண் அமைச்சர் சரத்பவார், இன்னும் மூன்று வாரங்களுக்கு வெங்காய விலை உயர்ந்தே இருக்கும் என்று கூறியுள்ளார். வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கு தயாராக இருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் சரத்பவார் கூறினார்.
ஆலோசனைக்கூட்டம்
இதற்கிடையே, விலை உயர்வு விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த வெங்காய விளைச்சல் அதிகமாக உள்ள ஆந்திரா, கர்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களின் வேளாண்துறை செயலர்களின் கூட்டத்தை மத்திய அரசு நாளை டெல்லியில் நடத்துகிறது. இதில், வெங்காய உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications