வருமான வரி சட்டங்களை எளிமைபடுத்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையில் 10 பேர் குழு
டெல்லி: வருமான வரி சட்டங்களை எளிமைப்படுத்துவதற்காக, ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
முதல்நிலை அறிக்கையை ஜனவரி 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு இக்குழுவிடம் மத்திய அரசு இக்குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இந்தக்குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட உள்ள 2016-17-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் சில மாற்றங்கள் செய்து அறிவிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறுகையில்,
வருமான வரி சட்டங்களில் உள்ள கடினமாக சில பிரிவுகளை ஆய்வு செய்து எளிமைப்படுத்துவதற்காகவே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சில உட்பிரிவுகள் தெளிவற்று குழப்பத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. இதுபோன்ற குழப்பங்களால் சிலர் நீதிமன்றங்களை நாடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற குழப்பத்தை நீக்கி, வருமான வரி சட்டம் குறித்து நாட்டு மக்களுக்கு தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு மத்திய அரசு இந்தக்குழுவை அமைத்துள்ளது.
வருமான வரி சட்டங்களில் உட்பிரிவுகளை எளிமைபடுத்தி, திருத்துவது குறித்து இந்த குழு ஆலோசனை வழங்கும். இதன்மூலம், வருமான வரி சட்டங்களில் நிச்சயத்தன்மை உருவாகும். அதே நேரத்தில், வரி செலுத்துவோர் எண்ணிக்கையிலோ அல்லது வரி வசூலிலோ எந்த கணிசமான மாற்றமும் ஏற்படாது.
இந்த குழுவில், அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற பல்வேறு நிபுணர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்தக் குழு வரும் ஜனவரி மாதம் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. அதனை ஆய்வு செய்து அவற்றில் எவை எவை ஏற்புடையதோ, அத்தகைய உட்பிரிவுகளை எளிமைப்படுத்த முயற்சிப்போம் என்றார்.
இதற்கு முன்பு ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.பி.ஷா தலைமையில், இதே போன்று ஒரு களு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மத்திய வருவாய்துறை செயலர் ஹாஸ்முக் ஆதியா கூறுகையில்,
நீதிபதி ஆர்.வி.ஈஸ்வர் குழுவின் பதவிக்காலம், ஓராண்டு ஆகும். குழுவில், முன்னாள் சட்ட செயலாளர் வி.கே.பாசின் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இக்குழு, மூன்று துணைக்குழுக்களையும் நியமித்துக்கொள்ளலாம். துணைக்குழுக்கள் சமர்ப்பிக்கும் வரைவு அறிக்கையை நீதிபதி ஈஸ்வர் குழு பரிசீலித்து ஒப்புதல் அளிக்கலாம், என்றார்.
மேலும், நீதிபதி ஈஸ்வர் குழுவின் சிபாரிசுகள், இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். அக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், வருமான வரி சட்டம் திருத்தப்படும் என்றும் அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications