அய்யா அய்யா.. டொடொடடொய்ங்... மேக் இன் இந்தியா.. இனி ரயில் பிச்சைக்காரர்கள் இப்படியும் பாடலாம்!
டெல்லி: ரயிலில் பிச்சை எடுப்பவர்களின் மூலம் மத்திய அரசின் திட்டங்களைப் புதுமையான முறையில் பிரபல படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலனுக்காக அமல் படுத்தியுள்ள பல புதிய திட்டங்களை எல்லாதரப்பு மக்களிடமும் கொண்டு சேர்க்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன்படி, தெரு வீதிகளில் நடத்தப்படும் நாடகங்கள் மூலம் மத்திய அரசின் திட்டங்கள் பிரபலப்படுத்தப்பட்டு வருகின்றன. இது தவிர ஆல் இண்டியா ரேடியோவுடன் இணைந்தும் புதிய திட்டங்கள் பற்றி மக்கள் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு வருகிறது.
புதிய திட்டம்...
இந்நிலையில், புதுமையான திட்டம் ஒன்று ஆலோசிக்கப் பட்டு வருகிறது. அதன்படி, மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க ரயில்களில் பிச்சை எடுப்பவர்களைப் பயன்படுத்தலாமா என ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ளது.
மனதை மயக்கும் பாடல்கள்...
பொதுவாக ரயில்களில் பிச்சை எடுப்பவர்கள் பெரும்பாலும் சினிமா பாடல்களையும், சிலர் மதம் தொடர்புடைய பாடல்களையும் பாடி பிச்சை எடுப்பர். மனதை மயக்குவதாக அவர்கள் குரல் அமைந்திருக்கும்.
பயிற்சி கொடுத்து...
எனவே, அத்தகையவர்களுக்கு பயிற்சி கொடுத்து மத்திய அரசின் திட்டங்களை பாடல்களாக ரயில்களில் பாட வைக்கலாமா என ஆலோசிக்கப் பட்டு வருகிறது. இதற்காக நாடெங்கும் ரயில்களில் பாட்டுப்பாடி பிச்சை எடுப்பவர்கள் குறித்த கணக்கெடுப்பு தொடங்கியுள்ளதாம்.
சம்பளமும் உண்டு...
மத்திய அரசின் திட்டங்கள் குறித்த பாடல்களை இவர்களிடம் தெரிவித்து பயிற்சி அளிப்பது பற்றியும் திட்டமிடப்பட்டு வருகிறது. இவை தவிர மத்திய அரசு திட்டங்களை பலதரப்பட்ட பயணிகளிடமும் கொண்டு சேர்க்கும் இவர்களுக்கு சம்பளமாக எவ்வளவு கொடுப்பது என்பது பற்றியும் ஆராயப்பட்டு வருகிறது.
ஆரம்ப நிலையில்...
இப்போதைக்கு இந்த யோசனை ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவும், பிரதமர் அலுவலகம் இந்த யோசனை ஏற்றுக் கொண்டால் இது அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்போ, இனி மேட் இன் இந்தியா, சுத்தம் என்பது நமக்கு மாதிரி பாடல்களை அடிக்கடி ரயில்களில் கேட்கலாம்.