ஒரு படத்தை உங்களால ரிலீஸ் செய்ய முடியல... எப்படி அந்நிய முதலீட்டை காப்பீங்க? - கெஜ்ரிவால் கலாய்
மத்திய, மாநில அரசுகளும், உச்சநீதிமன்றமும் இணைந்து முயற்சித்தும் ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்து ஓடவைக்க முடியவில்லை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
டெல்லி: அந்நிய முதலீடு பற்றி அப்புறம் கவனிக்கலாம், உள்ளூர்வாசி முதலீடு செய்து எடுத்த ஒரு படத்தை மத்திய, மாநில அரசுகளும், உச்சநீதிமன்றமும் இணைந்து முயற்சித்தும் ரிலீஸ் செய்து ஓடவைக்க முடியவில்லை என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்மாவத்' திரைப்படத்தை வெளியிட ராஜபுத்திர அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த படத்தில் ராணி பத்மாவதியின் கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என்று அந்த அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. இயக்குநர் பன்சாலியை சிரச்சேதம் செய்வோம், நடிகை தீபிகா படுகோனின் மூக்கை அறுப்போம் என்று கர்னி சேனா உள்ளிட்ட அமைப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன.
இதற்கு எதிராக வழக்குகள் போடப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் இந்த படத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுத்து விட்டது. இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள கெஜ்ரிவால், அனைத்து மாநில அரசுகள், மத்திய அரசு, உச்சநீதிமன்றமும் ஒன்றிணைந்து ஒரு படத்தை பாதுகாப்பாக ரிலீஸ் செய்து, ஓடவைக்க முடியவில்லை என்றால் பட தயாரிப்பு போன்ற துறைகளில் முதலீடுகளை நாம் எப்படி எதிர்பார்க்க முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
If all state govts, central govt and SC together cannot get one movie released and run safely, how can we expect investments to flow in? Forget FDI, even local investors wud feel hesitant. Not gud for already dwindling economy. Bad for jobs
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 24, 2018
நேரடி அந்நிய முதலீட்டை மறந்து விட்டு, உள்ளூர் முதலீட்டாளர்களுக்காவது நல்லதை செய்ய மத்திய அரசு முன்வரவேண்டும் என கெஜ்ரிவால் கேட்டுக்கொண்டுள்ளார். இதேநிலை தொடர்வது நமது பொருளாதாரத்திற்கு நல்லதல்ல வேலைவாய்ப்புக்கும் இது நல்லதல்ல எனவும் அவர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.