கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பு சனாதன் சன்ஸ்தாவை தடை செய்க - காங்.
மும்பை: இடதுசாரி சிந்தனையாளரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த இந்துத்துவா தீவிரவாத அமைப்பான சனாதன் சன்ஸ்தாவை மகாராஷ்டிரா அரசு தடை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கோவிந்த் பன்சாரேவை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த போலீசார் சனாதன் சன்ஸ்தா என்ற இந்துத்துவா தீவிரவாத அமைப்பின் நிர்வாகி சமீர் கெய்க்வாட்டை கைது செய்துள்ளனர். மேலும் அவரது 2 உறவினர்களிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான், கருத்து சுதந்திரத்துக்கு எதிரான சனாதன் சன்ஸ்தாவை மாநில அரசு தடை செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தியுள்ளார்.
இதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ண விகே பட்டீலும் சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய கோரியுள்ளார்.