மறுபடியும் "மயக்க" வருதாமே மேகி...?
டெல்லி: மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளதைத் தொடர்ந்து, தடை நீக்கப் பட்டு மீண்டும் அவை சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர் பார்க்கப்படுகிறது. இதனால், நூடுல்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரண்டே நிமிடம் போதும் சமைக்க என்ற விளம்பரம் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது மேகி நூடுல்ஸ். சமைக்கும் நேரம் குறைவு, ருசியும் அதிகம் என்பதால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை மேகிக்கு ரசிகர்கள் ஆனார்கள்.
ஆனால், சமீபத்தில் வெளியான செய்தி கேட்டு, பலருக்கு ஹார்ட் அட்டாக் வராத குறைதான். அனுமதிக்கப் பட்டதை விட கூடுதலாக மேகி நூடுல்ஸ்ஸில் ரசாயனம் சேர்க்கப் பட்டிருப்பதாக வெளியான அதிர்ச்சித் தகவல் தான் அது.
மேகிக்கு தடை...
அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல மாநிலங்களில் மேகிக்கு தடை விதிக்கப் பட்டது. நெஸ்லே நிறுவனமும் தடையைத் தொடர்ந்து சந்தையில் உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாபஸ் பெற்றுக் கொண்டது.
தீங்கு விளைவிப்பவை...
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் 9 வித மேகி நூடுல்சுகளையும் பாதுகாப்பற்றவை மற்றும் மனிதர்களுக்கு தீங்குவிளைவிப்பவை என்று கூறி மத்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் நாடு முழுவதும் தடை செய்தது.
நஷ்டம்...
அவற்றை சிமெண்ட் உடைக்கும் தொழிற்சாலைகளில் போட்டு அழித்தது நெஸ்லே நிறுவனம். இதன் மூலம் அந்நிறுவனத்திற்கு பல கோடி ரூபாய் மதிப்பிலான நஷ்டம் ஏற்பட்டது.
ஆய்வு...
கோவா உணவு மற்றும் மருந்து நிர்வாகம் 5 மாதிரி நூடுல்ஸ்களை ஆய்வுக்காக மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்பியது. இந்த ஆய்வின் முடிவில் உணவு பாதுகாப்பு விதிகள் 2011 ன் விதிகள் அனுமதிக்கப்பட்ட அளவுடன் மேகி நூடுல்ஸ் ஒத்துபோவது கண்டறியப்பட்டது.
பாதுகாப்பானது தான்...
இதனால், மேகி நூடுல்ஸ் பாதுகாப்பான உணவு தான் என உணவு பாதுகாப்பு தர நிர்ண ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலால் நெஸ்லே நிறுவனம் நிம்மதி அடைந்துள்ளது.
மீண்டும் விற்பனை...
இதன் தொடர்ச்சியாக நெஸ்லே நிறுவனத்தின் புதிய இந்திய தலைவரும், மேகி நூடுல்ஸ் சந்தையில் மீண்டும் விற்பனைக்கு விரைவில் வரும் என்று தெரிவித்துள்ளார். இந்தச் செய்தியால் மேகி நூடுல்ஸ் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இனி எத்தனை பேர் மீம் போட்டு கொண்டாடப் போறாங்களோ!