கல்புர்கியைக் கொலை செய்த அதே பாணியில் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷ்!
Recommended Video
பெங்களூர்: பிரபல சித்தாந்தவாதி எம்எம் கல்புர்கி கொலை செய்யப்பட்ட அதே பாணியில் லங்கேஷ் பத்திரிகை ஆசிரியர் கெளரி லங்கேஷும் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் உள்ள ராஜராஜேஷ்வரி நகரில் உள்ள அவரது வீட்டில் வைத்து இன்று மாலை சுட்டுக் கொல்லப்பட்டார் கெளரி. மிகக் கோரமான படுகொலை இது. இன்று மாலை 6.30 மணியளவில் நடந்த இந்த கோழைத்தனமான படுகொலைச் சம்பவம், மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலையாளிகள் மின்னல் வேகத்தில் தப்பி விட்டனர். சுடப்பட்ட சிறிது நேரத்திலேயே கெளரி உயிரிழந்து விட்டார். வெளியே போய் விட்டு வீட்டுக்குத் திரும்பிய கெளரி, காரை விட்டு இறங்கி வீட்டு கேட்டை திறந்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக சுட்டனர். அதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பிரபல எழுத்தாளர், பத்திரிகையாளர் பி.லங்கேஷின் மகள்தான் கெளரி. கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் சிறந்த பத்திரிகையாளராக விளங்கியவர் லங்கேஷ்.
2 ஆண்டுகளுக்கு முன்பு சித்தாந்தவாதி கல்புர்கி எப்படிக் கொல்லப்பட்டாரோ அதேபோலத்தான் இப்போது கெளரியும் கொல்லப்பட்டுள்ளார்.
மத அமைப்பினரின் மிரட்டலுக்குள்ளாகி வந்தவர் கெளரி. அவர்களிடமிருந்து இவருக்கு மிரட்டல்களும் இருந்து வந்தன. கடந்த ஆண்டு இவர் மீது அவதூறு வழக்குகளும் தொடரப்பட்டன. அந்த வழக்குகளை பாஜகவினர்தான் தாக்கல் செய்திருந்தனர். அப்போது பாஜகவினர் என்னை சிறையிலேயே வைத்துப் பார்க்க ஆசைப்படுகின்றனர் என்று கூறியிருந்தார் கெளரி.
இந்த நிலையில்தான் இன்று கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார் கெளரி.