புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களிடையே கோஷ்டி மோதல் - அலுலககத்தை சூறையாடியதால் பதற்றம்
புதுச்சேரி : பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, துணைவேந்தருக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் தாக்குதல் நடத்தியதால் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்யக்கோரி கடந்த மாதம் 27-ஆம் தேதி முதல், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஆதரவுடன் மாணவர்களின் ஒரு பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரமடைந்ததால் சந்திரா கிருஷ்ணமூர்த்தி ஒரு வார விடுப்பில் சென்றுவிட்டார். இதையடுத்து மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தில் பட்டாசு வெடித்து, வெற்றி ஊர்வலம் நடத்தினர்.
மேலும் பல்கலைக்கழத்தின் நிர்வாகக் கட்டடத்தினை முற்றுகையிட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் ஆகியோர், பதிவாளர் பொறுப்பு வகிக்கும் பன்னீர்செல்வத்தையும் பதவி விலகக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், துணைவேந்தருக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் ஆவேசம் அடைந்து நேற்று போராட்டம் நடத்திய மாணவர்களை தாக்கியதோடு, அவர்களுக்கு ஆதரவளித்த பேராசிரியர்களின் அலுவலகங்கள் மற்றும் துறை அலுவலகங்கள், வாகனங்களையும் அடித்து நொறுக்கினர்.
இதில் அலுவலகங்களின் கதவுகள், கண்ணாடி தடுப்புகள், மேசை, கார்கள் போன்றவை அடித்து நொறுக்கப்பட்டன. இந்த தாக்குதலில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
சுமார் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து தாக்குதல் நடத்தியதால், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் சிதறி ஓடினர். இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது.
தொடர்ந்து பிரச்சினை நீரு பூத்த நெருப்பாக இருப்பதால், புதுச்சேரி மத்திய பல்கலைக் கழக வளாகம் பதற்றத்துடன் காணப்படுகிறது.