குஜராத் தேர்தல்.. ஆம் ஆத்மி ஆதிக்கத்தால் பலன் பாஜகவிற்கு? காங்கிரசை கலவரமாக்கும் கள நிலவரம்
அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மும்முனைப் போட்டி நிலவினாலும் களநிலவரம் பாஜகவுக்கே சாதகம் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
182 தொகுதிகளைக் கொண்டது குஜராத் சட்டசபை. இம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு 92 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் இம்மாநிலத்தில் பாஜக தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்து வருகிறது. குஜராத் மாநிலம் பாஜகவின் கோட்டையாக திகழ்கிறது. இம்மாநிலத்தில் நீண்டகாலம் முதல்வராக பதவி வகித்தார் பிரதமர் மோடி.
குஜராத்தில் 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பாஜக 99; காங்கிரஸ் 77 இடங்களில் வென்றது. தற்போது குஜராத் சட்டசபையில் பாஜக பலம் 111 ஆகவும் காங்கிரஸ் கட்சிக்கு 62 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.

களமிறங்கிய ஆம் ஆத்மி
குஜராத் மாநிலத்தில் இதுவரை பாஜக, காங்கிரஸ் என இரு பெரும் கட்சிகளிடையேதான் போட்டி இருந்தது. இம்முறை முதல் முறையாக குஜராத்தில் ஆம் ஆத்மி தேர்தல் களத்தில் இறங்கி உள்ளது. இதனால் குஜராத் மாநிலத்தில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியான பாஜகவை எதிர்த்து தீவிர பிரசாரம் செய்து வருகிறது. குஜராத் ஆம் ஆத்மி கட்சி முதல்வர் வேட்பாளரை மக்களின் கருத்தைப் பெற்றே அறிவிப்பேன் என டெல்லி முதல்வரும் அக்கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி அதிக இடங்களைப் பெறாது என்பது கருத்து கணிப்புகளின் முடிவுகள். ஆனால் ஆம் ஆத்மி கட்சியானது சுமார் 10% முதல் 15% வாக்குகளைப் பெறக் கூடும் என்றும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பாஜக- ஆம் ஆத்மி மோதல்
குஜராத் மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு பலம் கணிசமாக இருப்பது தெரியவந்தது. இதனால் சில சிறிய கட்சிகள் ஆம் ஆத்மியுடன் கை கோர்க்க விரும்பின. ஆனால் இந்த கூட்டணிகள் நிலைக்கவில்லை. குஜராத்தில் காங்கிரஸை விட ஆம் ஆத்மி கட்சியைத்தான் பாஜக கடுமையாக விமர்சிக்கிறது.

காங்.-க்கு பின்னடைவு?
இருந்த போதும் ஆம் ஆத்மி கட்சி அறுவடை செய்யக் கூடிய வாக்குகள் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸுக்க் கிடைக்க வேண்டிய வாக்குகள். ஆகையால் இது காங்கிரஸ் கட்சிக்குதான் பெரும் பின்னடைவு. ஆம் ஆத்மி கட்சி களமிறங்கி இருப்பதால் பாஜக தொடர்ந்து ஆட்சியை தாக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இருக்காது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

கருத்து கணிப்பு முடிவுகள்
குஜராத் தேர்தல் தொடர்பாக ஏபிபி சி வோட்டர் அண்மையில் கருத்து கணிப்பு நடத்தி இருந்தது. அதில் பாஜக கடந்த தேர்தல்களைவிட மிக அதிகமாக 135 முதல் 143 இடங்களில் வெல்லும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. காங்கிரஸ் கட்சியானது 36 முதல் 44 இடங்களில் வெல்லக் கூடும் என்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு அதிகபட்சம் 2 இடங்கள்தான் கிடைக்கும் என்றது. வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 46.8%; காங்கிரஸுக்கு 32.3% கிடைக்குமாம்; புதிய களத்தில் நிற்கும் ஆம் ஆத்மிக்கு முதல் தேர்தலிலேயே 17.4% வாக்குகள் கிடைக்கக் கூடிய சாத்தியம் உண்டு என்கிறது கருத்து கணிப்பு. குஜராத் தேர்தல் களத்தில் ஆம் ஆத்மி இறங்காமல் இருந்தால் பாஜகவிடம் இருந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியிருக்க வாய்ப்புகள் அதிகம் என்பதையே ஆம் ஆத்மி கட்சி பெறக் கூடிய வாக்கு சதவீதம் வெளிப்படுத்துகிறது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.












Click it and Unblock the Notifications