குஜராத் தேர்தல் வேட்பாளர்களில்.. 330 பேர் கிரிமினல்கள்.. ஷாக் ரிப்போர்ட்.. எந்த கட்சி டாப் தெரியுமா?
காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், இவர்களில் 192 பேர் மிகக் கொடூரமான குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்பது கூடுதல் அதிர்ச்சி தரும் விஷயமாக உள்ளது.
இந்த கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது எந்தக் கட்சி தெரியுமா? வேறு யாருமல்ல. அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி தான்.
குஜராத் காங். கூட்டத்தில் சீறிய காளை! பதறி ஓடிய தொண்டர்கள்! அவிழ்த்துவிட்டு வேடிக்கை பார்த்த பாஜக?
மொத்தம் 1,621 வேட்பாளர்கள்
ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரும் 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. 182 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ள இந்தத் தேர்தலில் மொத்தம் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி காணப்படுகிறது. பாஜக 182 தொகுதிகளில் போட்டியிடும் நிலையில், ஆம் ஆத்மி 181 தொகுதிகளிலும், காங்கிரஸ் 179 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
330 பேர் கிரிமினல்கள் - டாப்பில் ஆம் ஆத்மி
இந்நிலையில், இந்த வேட்பாளர்களின் குற்றப்பின்னணியை ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (ADR) ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த 1621 வேட்பாளர்களில் 330 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் முதலிடத்தில் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி உள்ளது. அதாவது, அக்கட்சி வேட்பாளர்களில் 61 பேர் மீது கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸில் 60 வேட்பாளர்கள், பாஜகவில் 32 வேட்பாளர்கள் கிரிமினல் குற்றப்பின்னணி கொண்டவர்கள் ஆவர்.
கொடூர கிரிமினல்கள்
இதனிடையே, இந்த கிரிமினல் வேட்பாளர்களிலேயே 192 பேர் கொடூரமான குற்றப்பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். கொலை, கொலை முயற்சி, பலாத்காரம், ஆள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டவர்கள் இந்த பட்டியலின் கீழ் வருவார்கள். இந்தப் பட்டியலிலும் ஆம் ஆத்மியே முதலிடம் பிடித்திருக்கிறது. அக்கட்சியை சேர்ந்த 43 வேட்பாளர்கள் கொடூர குற்றங்களை புரிந்தவர்கள் ஆவர். இதற்கு அடுத்தப்படியாக காங்கிரஸில் 28 வேட்பாளர்களும், பாஜகவில் 25 வேட்பாளர்களும் கொடூரமான கிரிமினல் வழக்குகளை கொண்டவர்களாக உள்ளனர்.
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது
இந்நிலையில், இந்த கிரிமினல் வேட்பாளர்கள் பட்டியலை தயாரித்த ஜனநாய சீர்திருத்தங்களுக்கான சங்கம் இதுகுறித்து கூறுகையில், "2020-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவிட்டது. அதில், அரசியல் கட்சிகள் குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களை தேர்வு செய்யக்கூடாது எனக் கூறியிருந்தது. அப்படி கிரிமினல் பின்னணி கொண்டவர்களை தேர்வு செய்தால், அதற்கு உரிய விளக்கத்தை அரசியல் கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை எந்தக் கட்சியும் பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இந்த உத்தரவை தொடர்ந்து நடைபெற்ற ஏராளமான தேர்தல்களிலும் குற்றப்பின்னணி கொண்டவர்கள் அதிக அளவில் போட்டியிட்டு வருகின்றனர். குஜராத் தேர்தலும் அதற்கு விதிவிலக்கு இல்லை. சட்டத்தை உடைப்பவர்களே சட்டத்தை உருவாக்குபவர்களாக மாறினால், பாதிக்கப்படுவது என்னவோ நம் நாட்டின் ஜனநாயகம்தான்" என அது குறிப்பிட்டுள்ளது.